எழுந்து வாருங்கள்

Author: நதியானவள், October 13, 2009
October 13, 2009

எழுந்து வாருங்கள்
என் வீரத் தமிழர்களே
நாம் மரணிப்பதற்கு முன்னும் பின்னும்
செய்யவேண்டியவை கோடி

 

ஆண்டாண்டு காலமாய்
ஆண்ட எம் மண்ணை
அந்நியன் ஆள விட்டுப் போகலாமா?

 

தமிழ் காத்த எம் குலத்தை
எவனோ ஒருவன் அழிப்பதுவா
எம் குலப் பிஞ்சு துயில
ஏதோ ஒன்றில் தாலாட்டா

 

நான்கு சுவரைக் கட்டி
நான்காயிரம் ஆணையிட்டு
நாளைய சந்ததிகளின்
நாட்கள் எண்ணப்படுவதா

 

கவரிமான் ஒப்ப
கற்புக் காக்கும் எம் குலத்தில்
கறுப்பு ஆடுகளின்
கர்ப்பங்கள் தங்குவதா

 

எழுந்து வாருங்கள்
என் வீரத் தமிழர்களே
நாம் மரணிப்பதற்கு முன்னும் பின்னும்
செய்யவேண்டியவை கோடி

 

கொட்டும் மழை நிறுத்திக்
கொப்பளிக்கும் மின்னல் கட்டி
இழுத்து வாருங்கள் அந்த இடியை
“இத்தால் நாம் அறிவிப்பது என்னவென்றால்”
என்று அறையுங்கள் முரசை
கலையட்டும் இவ்வுலகின் தூக்கம்

 

எம் கண்கள் வழிந்த கண்ணீரில்
ஏன் உப்பளங்கள் செய்தாயென்று
கேட்டுக் கத்துங்கள் தோழர்களே
உங்கள் பெருகும் துளிகளில்
பொங்கிக் கொக்கரிக்கட்டும் கடல்கள்
மூழ்கட்டும் இந்தப்
பாழ்பட்ட பொய் உலகு

 

 
எங்கள் உயிரின் வலியில்
அறிக்கைகளை மட்டுமே போட்டு
காயங்களைக் குடைந்து குடைந்து
ஏன் எங்களுக்கு நஞ்சு வைத்தீர்கள் என்று
கதறுங்கள் தமிழர்களே
உங்கள் நாப்பிறக்கும் விஷத்தில்
நஞ்சாகட்டும் காற்று

 

காணாமல் போவதற்கா நாம்
தாய் வயிற்றில் கருவானோம்
எங்கே தொலைத்தீர்கள் எங்களை?
ஏன் தொலைத்தீர்கள் எங்களை?
எங்கள் சுயமழிக்க நீங்கள் யார்?
எழுந்து கேளுங்கள் தோழர்களே
உங்கள் கேள்விகளில்
தொலையட்டும் இவ்வுலகு
தொலைந்தே போகட்டும்

 

முறம் கொண்டு புலிவிரட்டி
முலைப்பாலூட்டிய தமிழ்த்தாயின் மடி
முளைத்த வீரர்கள் நாம்
எமையழிக்க உம்மால்
எப்படி முடியுமென்று
அறையுங்கள் உங்கள் முரசுகளை
உலகத்தின் செவிப்பறைகள்
கிழிந்தே போகட்டும்

 

உங்களுள் எரியும் பொறிகளைக் கொட்டி
உருவாக்குங்கள் எரிமலைகளை
விதைத்துப் போங்கள் இத் தரணி எங்கும்
பெத்துப் போடுங்கள் அக்கினிக் குஞ்சுகளை
கெக்கலித்துப் பரவட்டும் தீ
எரிந்து போகட்டும் உலகம்

 

எரிந்து போங்கள் அதில் நீங்கள்
உங்கள் ஊனுருகிப் பிறக்கும்
முள்ளந்தண்டுகளில் நிமிரட்டும்
எங்கள் குலம்
உங்கள் எலும்புகளில் செய்யுங்கள்
குழந்தைகளுக்கான ஆயுதங்களை
சாம்பல் தட்டி மீண்டும்
எழுந்து பறவுங்கள் “பீனிக்ஸ்” களாக
மறைத்துப் போங்கள்
இந்த உலகத்தின் சூரியனை

 

மிஞ்சும் பிளம்புகளை உங்கள்
பிஞ்சுகள் சுமக்கட்டும்
உங்களை எரித்த கொள்ளிகளில்
உதிர்க்கட்டும் அவர்களின் சூரியன்
அதில் சிவந்து சிறக்கட்டும்
எம் ஈழ தேசம்

 
எழுந்து வாருங்கள்
என் வீரத் தமிழர்களே
நாம் மரணிப்பதற்கு முன்னும் பின்னும்
செய்யவேண்டியவை கோடி

அம்மா

Author: நதியானவள், October 5, 2009
October 5, 2009

கர்ப்பம் தந்த அதே கதகதப்பை

இப்போதும் பொழிகின்றன
உன் பேரன்புச் சிறகுகள்
நித்தமும் பிரவாகமெடுக்கும்
உன் கருணைச் சுழிக்குத்தான்
எத்துணை ஆழம்
 
 
அட்சய பாத்திரங்கள் அத்தனையும்
கையிலே வைத்திருக்கிறாய்
போதாதற்கு உன் புன்னகை வேறு
 
 
பருவ காலங்கள் அத்தனையும்
உன்னைக் கேட்டே வருகின்றன
நீயே காவலுக்கிருப்பதால்
 
 
எதற்கும் யோசிப்பதா
கணமும் கவலைப்படுவதா
எனக்காக அதையும் நீயே செய்கிறாய்
என் வலிகள் உனதாக்கி
சுகங்கள் மட்டுமே எனதாக்கி வாழ
உன்னால் மட்டுமே முடிகிறது
அம்மா
கோடி வார்த்தைகளை
என் தமிழ் தந்திடினும்
திணறித் தான் போனேன்
உன்னைக் கவிதையாய் வடிக்க
முடிவில்லாது நீளும்
உன் பேரன்பு போலவே
முடிக்க முடியாது நீள்கின்றன
உன்னைப் பற்றிய என் கவிதைகள்

சாத்தியக் கூறுகள்

Author: நதியானவள், October 4, 2009
October 4, 2009

நான் பெய்யெனப் பெய்யும்
என் முகில்களிலிருந்து
வழிந்து இறங்கியது காதல்
 
 
நிரம்பிப் போன
என் கவிதைக் குளங்கள்
பெருக்கெடுத்துக் கொண்டேயிருந்தன
 
 
நானும் நீயுமாகிய இரு
மடுக்களிடைப் பிளந்து
வழிந்து பாயத்தொடங்கின
 
 
எல்லாம் சேர்ந்து நதியாகியபின்
கரை மருவித் தேடலுடன்
அலைந்து கொண்டேயிருந்தன
 
 
பின்னொரு நாளில் அவை
பகர்ந்த போதுதான் தெரிந்ததது
உன்னைத் தேடுகின்றன என்று
 
 
நதி திரும்பி மேலேற
ஏதேனும் சாத்தியக்கூறுகள்?

அந்த அரை நொடிக் கனவு

Author: நதியானவள், October 4, 2009
October 4, 2009

குழம்பிய கனவுகளுடன்

தூங்கவே முடியவில்லை
ஆயிரம் தடவைகள் விழித்தாலும்
தூக்கமும் விடவேயில்லை
 
 
வலிக்கும் கண்ணிமைகளிலே
வந்தமர்ந்த மீதிக் கனவுகளை
நாளையிரவுக்கென்றே
சேமிக்க முடிகிறது
 
 
பாதி கனவொன்றுக்குள்
அயர்ந்த போது தான்
அரை நொடிக்குத் தெரிந்தது
உன் முகம்
 
 
விட்டு விட்டு வந்து போகும்
கலங்கிய கனவுகளுக்குள்
எப்படித் தேடுவேன்
அந்தக் கனவை
 
 
சரி கனவு கனவாகவே இருக்கட்டும்
நான் அயர்ந்து தூங்கவே விரும்புகின்றேன்

தேவதையின் சிறகுகள்

Author: நதியானவள், October 3, 2009
October 3, 2009

என் பூக்களில் தரையிறங்கிய
அத்தனை தேவதைகளும்
மெலிதாகவே அசைத்தனர்
தத்தம் சிறகுகளை

 

 
அசைப்பதேயில்லையென்று
முடிவு செய்திருந்ததாகவும்
என் கவிதை வீசிய தென்றல்
அசைத்துவிட்டதாகவும் விசனமுற்றனர்

 

என் கவிதைகளின் தாலாட்டில்
தாம் தூங்கிவிடலாமென்று
சீக்கிரமாகவே கிளம்பிப்
பறக்க முற்பட்டனர்

 

சற்று நில்லுங்கள் என்று
கேட்டுக் கொண்டேயிருந்தேன்
அவர்களின் பயத்தில் நியாயமிருப்பதாக
எனக்குப் படவேயில்லை

 

ஆயிரம் வரங்கள் கேட்கும்
ஆயத்தத்தில் இருந்த என் மனதோ
துவண்டே போனது
கடைசித் தேவதையை மறித்தது

 

எல்லாம் தந்து போக
என் கவிதை கேட்ட தேவதை
நீண்ட நேரம் நின்று
பார்த்துக் கொண்டேயிருந்தது

 

விரல் வழிந்த என் உயிரோ
பற்றியது என் கவிதையை
நிமிர்ந்து பார்த்தது தேவதையை
தன் மௌனம் கலைத்தது

 

“நான் தொலையத் தொலைய
உயிர்ப்பிக்கும் என் கவிதை தவிர
வேறெதுவும்” தேவையேயில்லை”

 

பறந்த தேவதையைக்
காணவேயில்லை
உதிர்ந்த சிறு சிறகில்
என் கவி வரிகள்

நானுமின்றி யாருமில்லை!……….

Author: நதியானவள், October 3, 2009
October 3, 2009

எதையுமே பதிவதில்லை
என் தினப் பதிவேட்டில்;
எதுவுமே நினைவிலில்லை
என் மனவேட்டில்;

 

கனவுகள் காண்பதில்லை
கண்கள் நனவேட்டில்;
கண்மணிகள் நனைவதில்லை
கண்ணீர் சுனை வீட்டில்;

 

தேவதைகள் அழுவதில்லை
தேவனின் கணக்கில்;
தெளிந்த நதி நிற்பதில்லை
தேடும் பயணத்தில்;

 

நாளை என்றதில்லை
நான் நடக்கும் பருவத்தில்;
நடக்கும் நொடி தவிரவில்லை
நான் கடக்கும் பயணத்தில்;

 

காதலில்லை காயமில்லை
எந்தன் உலகத்தில்;
சாதலில்லை உயிர்ப்புமில்லை
எந்தன் ஆட்சியில்;

 

வாழ்ந்து போக நானுமில்லை
என் உயிர் தவிர;
ஆள்ந்து போக எவருமில்லை
என் யாக்கை தவிர;

வா….பிரிவோம்…போ

Author: நதியானவள், September 24, 2009
September 24, 2009

காதலும் நட்பும்
சந்திக்கும் புள்ளியில்
சமாந்திரங் கீறியது
மனது

 

அரிதாரங்கள் அப்பி
மறைத்துப் போகலாந்தான்
வழியும் குருதியில்
கோடு கரையுமே?

 

இதற்குத்தான்
எதிரெதிர்க் கோணங்களைக்
கணக்குப் பார்க்காதே என்றேன் நான்
எப்போதும் சமனாக இருக்காது
அது கீறுவதைப் பொறுத்து

 

விதிவிலக்குகளும் உண்டு
காமம் கலக்காத காதல்
காதல் கலக்காத நட்பு
முடியாதில்லையா?

 

என் மனதிற்கு வெள்ளையடிக்கும்
செலவை நீ ஏற்றுக் கொள்ளாதே
அதற்கு முன் எத்தனையோ
கிறுக்கல்களை அழிக்க
உன் ஆயுள் செலவிடவேண்டும்

 

அதனால் தான் சொல்கின்றேன்
சமாந்திரங்கள் சேர்வதில்லை
இறைக் கிறுக்கல்கள் அழிவதில்லை

 

வா
பிரிவோம்
போ

 

நட்பு அதிலேயே கிடக்கட்டும்
திரும்பினால் தொடர்வோம்

நீ சூரியன், மின்மினி என் காதல்……

Author: நதியானவள், September 24, 2009
September 24, 2009

படபடத்த மனத்தையும்
பளீரிட்ட காதலையும்
மறைத்துக் கொண்டிருந்தேன்
மின்மினிகளின் ஒளியில்
அவை வைரங்களாக ஒளிர்வதாக
என்னுடனே வாதாடிக் கொண்டுமிருந்தேன்
பகல் வந்தது
என் உலகின் எட்டுத் திக்கிலும்
எழுந்து பரவிய
உன் சூரியக் கீற்றுக்களில்
இறந்தே போயின பூச்சிகள்
இரவும் வந்தது
நீ போகவேண்டுமென்று அடமே பிடித்தாய்
போய் வா என்று அனுப்பிய பின்
அப்படியே கிடக்கின்றன
காதலும் மனமும்
இப்போது மின்மினியும் இல்லாது..

முப்புரம் எரித்தவனே
முக்கண் விநாயகனே
மூத்தவனைக் கோபித்த
எந்தன் கடம்பனே
சிவனின் பாதியே
சின மிகு காளியே
கோவில் காத்து நிற்கும்
வைரவேனே, மாடனே
முக்கோடி தேவர்களே
முனிகளே பரிவாரங்களே

 

வாருங்கள் எந்தன்
வழக்காடு மன்றுக்கு
நில்லுங்கள் அங்கே
எனக்கொரு வழக்குண்டு

 

பாலும் பசுநெய்யும்
பழமும் பன்னீரும்
பட்டுங் குஞ்சரமும்
பறித்தெடுத்த புதுப் பூவும்
கொட்டும் விபூதியும்
குளிர்க்க வைக்கும் அபிசேகமும்
நாவினிக்கும் தமிழ்ப் பாவும்
நாழிக்கொரு பூசையுமாய்
உங்களுக்கு நாங்கள்
என்னதான் குறை வைத்தோம்?

 

சம்பந்தன் பாக் கொண்ட
கேதீச்சரத்தானே
பேடுடன் விடையேறி
பேருலா நீ வந்த வீதியெல்லாம்
எருதுடன் எமை வெட்டுகையில்
நெற்றிக் கண் திறந்து
நெடுமென நின்ற ஈசா
முப்புரம் எரித்த தீயில்
மூன்று பொறி கிடைக்கலையா?

 

பசிகொண்ட சம்பந்தன்
இசைகூட்டி அழுத போது
ஞானப் பால் கொண்டு
விடையேறி வந்தவளே
பிஞ்சு நடை பயிலா வீட்டில்
பிச்சை மறுத்த சிவனே
பசி கொண்ட என் குழந்தை
செத்த தாய் மடி உறிஞ்சிய போது
வானுக்கும் மண்ணுக்குமாய்
ஏன் உங்கள் பசு பறக்கவில்லை?

 

நாலு வீதியில் பந்தலிட்டு
நாம் தேர் இழுத்த பாதைகளில்
நாயாய் என் சனம்
நாதியற்றுச் சாகையிலே
நல்லூர்க் கந்தா
எந்தப் படை வீட்டில் நீ
எத்துணைவி துணையிருந்தாய்?

 
கற்பூரச் சட்டியிலே தான்
காணிக்கையாக எரிந்த மகள்
கற்புக்காய் எரிகையிலே
கற்பூர நாயகியே கனகவல்லி
எங்கு போனாய்?

 

நயினையின் தேவியளே
தெல்லிப்பளை துர்காவே
வற்றாப்பளை குடிகொண்ட
மார்பு திருகி மதுரை எரித்தவளே
என் தேசம் அழிகையிலே
எங்கேயம்மா உங்கள் சூலங்கள்?

 

பாய் விரித்து மடை கொட்டி
பால் நிலவில் உனைப் பணிந்து
கோவில் காப்பது போல் எம்
கோட்டை காக்கக் கேட்டோமே
கோப வைரவனே
நீயுமேன் வரவில்லை?

 

ஐயோ ஐயோ என்று
அலறித் துடித்தோமே
எரியுதே என் தேசம்
ஈசா வா என்றோமே
படைத்தவன் படி அளப்பான் என்று
பட்டினியில் செத்தோமே
எங்கு போனீர்கள்
ஏன் ஒருவருமே வரவில்லை?

 

என் தாய் எனக்குத் தந்த
பாலின் மேல் உரிமை இருந்தால்
அவளூட்டி வளர்த்து விட்ட
என் தமிழ் மேல் உரிமை இருந்தால்
சைவத்தையும் தமிழையும்
கண்களாக்க உரிமை இருந்தால்

 

அந்தக் குருதி மேல் ஆணையிட்டு
என் தமிழின் மேல் ஆணையிட்டு
முக்கண்ணா நீ படைத்த
மூவுலகின் மேல் ஆணையிட்டு
அழைக்கிறேன் உங்களை;

 

வாருங்கள் கடவுள்களே
நில்லுங்கள் அங்கே
எனக்கும் உங்களுக்கும்
நீண்டதொரு வழக்குண்டு

என் தேசத்தின் தேவியே….

Author: நதியானவள், September 21, 2009
September 21, 2009

புல்லரிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றன
என் கைகள்
பல வேளைகளில் கோஷம் போடவும்
ஏன் சில வேளைகளில்
உன்னைப் பற்றிக் கவிதை கிறுக்கவும்

 

தலைப்புக்களில் தலையின்றிக் கிடக்கும்
தமிழினத்தைப் பார்த்து
முதல் பந்தி தாண்ட மறுக்கின்றன
என் விழிகள் அதிலேயே செத்து
கண்ணிமைக் கல்லறைகளைத்
தாமாகவே மூடுகின்றன

 

ஐயோ கடவுளே என்று
கதறுவதோடு நிற்கிறது
என் மனம்
இதயச் சவப்பெட்டிக்குள் இருப்பதால்
மெலிதாகவே கேட்கின்றன
அதன் முனகல்கள்

 

விதைத்த மனிதர்களின் தோட்டத்திலேயே
நடக்க மறுக்கும்
என் கால்கள்
மயானமான என் தேசத்தில்
எப்படிப் பதியும்
இப்போதே உதிர்கின்றன
என் விரல்கள் ஒவ்வொன்றாய்

 

புலம் பெயர்ந்து தொலைந்து
புதைந்தே போனது வாழ்க்கை
விட்டுப் பறந்த உயிரும்
அழுகிப் போன உடலும்
மரணித்துக் கிடக்கின்றேன் நான்

 

என் முகவரி தந்த
என் ஈழ தேசமே
உன் எரியும் நெருப்பில்
என் சிதைக்குக் கொஞ்சம்
கொள்ளி கிடைக்காது போயிற்றே
என் சாம்பல் தூவ
உன் நதிகள் ஒன்றிலிருந்தும்
உத்தரவு கிடைக்காது போயிற்றே

 

என் தேசத்தின் தேவியே
அந்நியப் பனியில்
அஸ்தியைக் கரைக்கும்
ஆசி வாங்கி வந்தவளம்மா
நான்
அதனால் தான்
உன் எல்லை தாண்டுகையிலேயே
செத்து விட்டு வந்தேன்

 

என் தாயே
உன்னுடன் உதிர்க்கட்டும்
என் உணர்வுகள்
நீ எரிக்கையில்
எரிக்கப் படட்டும் என் சாபங்கள்

 

அதுவரை பிசாசாய்த் தானும்
என்னுயிர் உன் மடி தேடி வந்தால்
இருக்க விடம்மா
உன் புளிய மரத்தில்
நீ பெற்றவள்
இது கூடவா செய்ய மாட்டாய்