சிந்தாமல் விட்ட துளி
Author: நதியானவள், December 2, 2009கண் ஓட்டைகளுக்குள்
இவ்வளவு குருதியிருக்குமென்று
நான் நினைதேயிருக்கவில்லை
அது உதடு நனைக்கும் போதான
உவர்ப்பை என்னால்
எப்போதுமே ரசிக்க முடிவதில்லை
என் நெஞ்சு சாற்றை உறிஞ்சி
எப்போதாவது வழியும் துளி
இனிக்கவும் செய்கிறது
பலவேளைகளில்
தாடை இறுக்கி
காற்றின் மூச்சு நிறுத்தி
விசும்பலின் கழுத்துத் திருகி
விக்கலில் முடிக்கையில்
நறுக்கென்ற ஒரு வலியுடன்
தன்னிருப்பை சொல்லி
துளியை உள்வாங்குகிறது
இதயம்
கூர்ப்பின் பரிணாமத்தில்
இன்னொன்றாக மாறி
என்னை ஆளத் தொடங்குகிறது
நான் சிந்தாமல் விட்ட அந்த
செங்குருதித் துளி
கண்ணில்லாக் கண்ணாடி
Author: நதியானவள், November 29, 2009என் கண்ணாடிக்கு
கண்கள் முளைத்திருந்ததை
இன்று அதிகாலைதான் பார்த்தேன்
நான் எதிர்பார்த்ததை விட
அகோரமாக இருந்தது
நான் அழகாகத் தெரிந்தேன்
ஆனால் அதன் கோர விழிகள்
என்னை நிராகரித்து
எனக்குள் இறங்கின
கண்ணாடியின் நீள் கரங்கள்
என்னுடல் கிழித்து
உள்ளே பதிந்து
நார் நாராய் நார் நாராய்
இழுத்துக் கொண்டே இருந்தன
இது என்ன
எதன்மேலான ஆசை இது
மேலும் என்னென்ன
காயங்கள்
வலிகள்
கலைந்த கவிக்கருக்கள்
இன்றிரவுக்கான கனவு
நாளைக்கான பயம்
அடுத்த நொடிக்கான பொய்
இன்னொன்றிலான பொறாமை
ஏன் நேற்று, முந்தய நாள்,
முதல்மாதம் அதற்கு
முந்திய வருடக் காதல்கள்
துரோக நட்பு
அப்பப்பா ஆயிரம் ஆயிரம்
கழிவுச் சாக்கடைக்குள்
அமிழ்ந்த ஒரு ஊரின்
பிணக்குவியல் போல
கணக்கற்று கணக்கற்று
பொல பொலவென உதிர்ந்த
புற உடம்பை அள்ளி
பொட்டலங் கட்டிஎடுத்து
என் முன்னே கடை பரப்பியது
கண்ணாடி
ஒரு தலைச் சிலுப்பலில்
மீண்டும் வளர்ந்தது உடல்
சாக்கடைப் பிணங்களை
மீண்டும் தின்று கொண்டே
கண்ணாடி பார்த்தது
நான் மிக அழகாகத் தெரிந்தேன்
கண்களிருக்கவில்லை
அதற்கு
இப்போது எனக்கும்
நினைவு வன்புணர்ச்சி
Author: நதியானவள், November 28, 2009அகோர நினைவுகளைப் பிரசவித்த
அசிங்கத் தழும்புகள் பல
என் வயிறெங்கும்
நான் மார்பு கிழித்தெறிந்த
அவற்றின் எச்சங்கள் பல
என் வழியெங்கும்
முண்டங்களெல்லாம் சேர்ந்து
முடிவிலியில் சந்திக்கின்றன
பிறிதொரு நாளில் எனை
இம்சிப்பது பற்றியும்
இன்னொரு மன வன்புனர்வுக்கான
இரகசிய ஆயத்தம் பற்றியும்
சூடாகவே விவாதிக்கின்றன
பிண நாற்றங்களிடையில் திமிறி
தன் மூச்சையே தேடும் உயிர்
வெற்று நெஞ்சுக் கூட்டில்
காதல் இருப்பதாகப் பிதற்றுகிறது
அது கனவில் இருக்கிறது
எதிர்பாராத கணத்தில் நடக்கும்
நினைவு வன்புணர்ச்சிகளில்
களைத்துக் கிடக்கிறது மனம்
காதல் பற்றிக் கதைக்க
அவற்றின் வாய் தேடுகிறது
எனினும் நீளும் வலிகளின் போது
முண்டங்களே பிரசவமாகின்றன
அவை முடிவிலியிலேயே தான்
சந்திக்கவும் செய்கின்றன
தானே தொலையும் நான்
Author: நதியானவள், November 21, 2009அலட்டிக் கொண்டேயிருந்தது
“நான்”
நாலு பேருக்குள்
கலையும்”நான்” யாரென்பது தான்
எனக்கு விளங்கவேயில்லை
என் ஆழமனங் கிழித்து
எழுந்து பறக்கும் அதற்கு
தீனி போடுகிறது கூட்டம்
நெரிசலுக்குள் நின்று
நெக்குருகவே அது பெரும்
பிரயத்தனப்படுகிறது
அதற்கு கூட்டம் வேண்டும்
சிரிக்க
அழ
தான் தூங்கும் போதும்
கூடவர நிழலுக்கு
உத்தரவிட்டிருந்தது
திரளும் கூட்டம் தன்னை
தானறியாமலேவிளுங்குவதாகப்
பின்னர் கூறியது
சனத்துக்குள் சனமாகிப்
பிணமாகிப் போனேன் என்று
இருந்துவிட்டு அழவும் செய்கிறது
தொலைத்ததும் தொலைக்கப்படுவதும்
தொலைப்பதும் தொலைக்க இருப்பதும்
தன்னாலே அது தன்னுள்ளே என்ற
பரம உண்மை அறியாது
மரங்கள் பிசாசுகளாகும்
நடுநிசியில் விழித்திருந்து
“நான்”அடிக்கடி தொலைவதாக
அலட்டிக் கொண்டேயிருக்கிறது
“நான்”
நித்திரை என்பதான பொய்
Author: நதியானவள், November 7, 2009விஸ்வரூபமெடுக்கும் சில பல
விளக்கமற்ற கனவுகளுக்குள்
தொலைந்தே போனது தூக்கம்
தேடிப் பறந்த மனதோ – தன்னை
மயானங்களின் எல்லையில்
பேய் பிடித்துப் போனதாகத்
தகவல் அனுப்பியது
நித்திரை என்பதான பொய் வெளிகளில்
நின்று புலம்புவதில் கழிந்தன
என் ஒவொரு இரவுகளும்
தூக்கம் தின்னுவதாகச் சுட்டப்பட்ட
நினைவுப் பட்சி
வலிகளின் கல்லறைகளின் இடுக்கில்
உணவிட்டுக் கொண்டிருந்தது
அலகில் வழிந்தது என் மனதின் குருதி
தின்னப் பட்டிருந்தது
அன்றிரவுக்கான தூக்கம்
இன்றைய வலிகளுக்கு
இப்போது தான் கல்லறை செய்தேன்
இன்றிரவும் தூங்க வேண்டும் – ஆனால்
நீள் வெளிகளில் நின்று
அழுவதோடு நிறுத்த வேண்டும்
தூக்கம் ஏற்கனவே சாப்பிடப் பட்டிருக்கும்
என் ஒரு நாள்
Author: நதியானவள், October 27, 2009ஒன்றுமே செய்யாமல் போனதற்காய்
ஓவென்று அழும் நொடிகளால்
நிரம்பிக் கிடக்கிறது
இலையுதிர்வது – அது காலம்
Author: நதியானவள், October 27, 2009உதிரும் இலைகளின் வடுக்களைச் சுமந்து
நெடுமென நிற்கிறது கால மரம்
இறைந்து கிடக்கின்ற சருகுகளுடன்
காய்ந்து கிடக்கின்றன மனத் துகள்கள்
பாதி மனதுதான் பாவம்
உச்சியில் கூடு கட்டி
கீழிருக்கும் மீதிக்காய்
ஓர் ஒப்பாரி முடிக்கிறது
எப்போதோ பொழியும் ஒரு மழையில்
துளிர்க்கிறது சிறு தளிர்
இப்போது மனது கீழே பார்ப்பதில்லை
அதற்கு தளிருடன் வேலையிருக்கு
காலமரத்தின் இன்னொரு வளையத்தில்
அது இலையாக உதிர்க்கப் படலாம்
மரத்துக்கு இதைப் பற்றித்
துளியூண்டும் வருத்தமில்லை
மிஞ்சிய மனம்தான் விம்மும்
அடுத்த மழைக்கான காத்திருப்பில்
இன்னொரு ஒப்பாரி இசைக்கும்
அது அடிக்கடி குனிந்து பார்க்கும்
தொடரும் காதல்கள்
Author: நதியானவள், October 27, 2009ஊசிக் குளிரில்
வந்து கொண்டேயிருக்கிறது
உனக்குள்ளே என்றாகட்டும்…..
Author: நதியானவள், October 19, 2009கண்ணுள் பரவிக் கிடக்கும்
குருதிக் குழாய்களினால்
கனவுகள் மட்டுமே
விநியோகிக்கப்படுகின்றன
எப்போதாவது கனத்துப் போகும்
என் கண்மடல்களின் வழி
வழிந்து போகின்றன அவை
என் காலடிகளிட்கு வெகு அருகில்
காய்ந்து போய்க் கிடக்கின்றன
என்னைத் தொடரும் உன்
ஈரப் புன்னகைகளில்
அவை மீள உயிர்ப்பிக்கப் படலாம்
இல்லை உன்னால் தொடரப்படும் பாக்கியம்
என்னால் இழக்கப்படலாம்
எது எவ்வாறெனினும்
அவ்வப்போது ஊட்டப்படும்
உன் நினைவுகளில் சிவக்கும் கண்களில்
உதிராமல் இருக்கிறது
உனக்கான என் காதல்
நீ பின்தொடரினும்
தொடராது போயினும்
அது வழியாது
உலராது
கண் வழிதான் உயிர் பிரியும்
அப்போது தான் காதல் வழியும்
அது உனக்குள் என்றாகட்டுமே
காதலின் மேல் ஒரு நட்பு
Author: நதியானவள், October 15, 2009நீளும் மயான வெளிகளில்
தூங்கிக் கிடந்த நிசப்தத்தைக்
கிழித்துப் போட்டதல்லால்
வேறொன்றும் செய்யவில்லை
உன் குரல்
துயின்றிருந்த நினைவுக் குழந்தைகளை
மீண்டும் தாலாட்டுவதுதான்
பெரும் பாடாகிப் போனது எனக்கு
பொட்டல் வெளிகளில்
கொட்டும் மேகத்துக்கும் எனக்கும்
யாதொரு சம்பந்தங்களும் இல்லை
என் உயிர் நனைக்கும் துளியை
எந்த வானமும் கருக் கொள்ளவில்லை
கண்கள் வழியும் கனவுகளை
வாசிக்கத்தான் உன்னால் முடியும்
என் மன ஊருணியின் ஆழங்கள்
ஆபத்தானவை
அவற்றுக்குப் பலி கொடுக்க
உன்னைத் தயார் படுத்த முடியாது
என் சுயங்களைப் பதுக்கி
உன் கருத்துக்களில் வாழ
என்னால் முடியாது
என் காதலுக்கான ஒரு கவிதையில்
பிறக்கும் காதலை
இன்னொன்றுக்காக நொடியில்
கொன்றே போடுகிறேன்
இது நிஜத்தில் முடியுமென்றிருக்கிறாயா?
உன் காதல்
என் நட்பு
சிறு இடைவெளியில்
நூற்றாண்டுகளுக்கான தூரம்
என்னால் கடக்க முடியாது
வழிப் போக்கர்களை பிரிகையிலே
வலித்துப் போகும் போது
நட்பைப் பிரிதல்
வலிக்காதா என்ன?
வலிகளில் வடியும் குருதியின்
பசைகளில் ஒட்டி இருக்கிறது
மீந்த நேசம்
இன்னொரு சந்தர்ப்பத்தில்
இன்னொரு காதலில்
உனக்கு நிச்சயம் பயன்படட்டும்
உன் காதலின் மகரந்தங்களில்
என் நட்பெனும் பூ கற்பிழக்க வேண்டாம்
காதலை கீழே போட்டு
நட்புக் கோபுரங் கட்டும்
துரோகங்கள் எனக்கு வேண்டாம்
சற்று விலகு
தள்ளி நின்று அழு
என் மயானங்களின் நிசப்தத்தில்
தூங்கும் என் நினைவுகளை
மீண்டும் எழுப்பாதே
நான் இவ்வளவுதான்
இப்படித்தான்
எனக்குத் துரோகங்கள் தெரிய வேண்டாம்
தெரியப்படுத்தப் படவும் வேண்டாம்

