சுதந்திரப்பட்ட ஆறாவது

Author: நதியானவள், February 11, 2010
February 11, 2010

அவன்
“பைத்தியம்”
அவனது ஆறாவது
சுதந்திரப்பட்டது
அவனது உலகத்தை
ஆறாவதுகள் சிருஷ்டித்தன

 

 

நாகரீகம் பேசின
உடைகள்
மொழி பரந்திருந்தது
அர்த்தங்கள் விளங்காததாயும்
அவன் நவீன கவிதைகளை
காற்றில் கிறுக்கினான்
குடித்தான்
மிகுதியை சுவாசித்தான்
ஒற்றைச் செருப்பினடி
ஒதுங்கிக் கிடந்தது
உலகம்

 

 

“சாப்பிட்டாயா” வினவ
என் வாசனைகள் தடுத்தன
ஆடை உள்ளுடம்பு
அதனுள் ஒரு உடம்பு
நிரம்பாத பள்ளங்களுடன்
மணக்கத் தொடங்கியிருந்தது
மறுதலிக்கப்பட்ட ஆத்மா
அவனுள் ஒளிர்வதாகப்பட்டது
“பிரம்மை”
அவன் சாக்கடை

 

 

ஆலயம் திறந்தது
எனக்காக மட்டும்
யாசித்த அவனுக்கும்
யாசிக்காத நாய்க்கும்
பிச்சை மறுத்து உள்ளேகி
பிச்சை கேட்டு மீண்டு
நானும் அவனும்
ஒரே தெருவில் நின்றோம்

 

 

அவனது ஆறாவது
சுதந்திரப்பட்டது
நகைத்தது எனதை
அது சிறையிலிருந்தது

 

 

எனக்கும் சிரிப்பு வந்தது
என் இதழ் பிறழ்ந்து
இம்மியாகப் பிரிந்து
யாரும் கவனிக்கவில்லை
என்னிடம் காரணம் இல்லை

 

 

பார்த்துக் கொண்டிருந்தார்கள்
அவனை
அதிசயங்கள் அந்நியமாக்கப்படுகின்றன
ஆறாவதுகளின் காரணங்களினால்

 

 

அவன் பேசத் தொடங்கியிருந்தான்
காரணமில்லாமல்
நிறைய சிரித்தான்
காரியத்துடன்
என்னைப் பார்த்தும்
இல்லை
அது “பிரம்மை”
அவன் பைத்தியம்

 

2 Responses to “சுதந்திரப்பட்ட ஆறாவது”

  1. nesamithran Says:

    Really impressive potry
    because i am not able to see the letters i am tyoping in english please check

  2. நதியானவள் Says:

    Thank…I’ll check it a oon a poible…

Leave a Reply