Archive for February, 2010
நிதானித்த பால்யம்
Author: நதியானவள், February 25, 2010படலைகளில் காய்ந்ததிலும்
எச்சில் மிட்டாய்களுக்காய்
ஏவல்கள் செய்ததிலும்
சட்டையின் பூக்கள் நிறம்
ஒட்டியிருக்கும் ஊஞ்சலிலும்
மண் சோறு தின்ன வந்த
அணில்களும் புலுனிகளும்
தீரத் தீரப் பேசிப் பின்னும்
எஞ்சியிருந்த பொழுதுகளிலும்
மாம்பூக்கள் ஆசிர்வதித்த
மஞ்சள் மாலைகளிலும்
நிதானமான நிமிடங்களுடன்
நீட்சித்துக் கிடந்தன
பால்யத்தின் நாட்கள்
தெருவின் புழுதிக்குள்
கொலுசின் மணிகளோடு
கழன்றனவாகின கனவுகள்
நான் படிப்பிக்காததால்
தோற்றிருந்தது நித்யகல்யாணி
தேற்றியபடி நாய்க்குட்டி
பனிகளுக்குள் பூத்திருந்தது
வாடாமல்லி வாசமற்று
ஈச்சம் பழத்தின் நிறம்
மறந்துவிட்டிருந்தது
இன்று காலையில்
நிதானித்தே போயிருந்தன
பால்யத்தின் நாட்கள்
சுதந்திரப்பட்ட ஆறாவது
Author: நதியானவள், February 11, 2010அவன்
“பைத்தியம்”
அவனது ஆறாவது
சுதந்திரப்பட்டது
அவனது உலகத்தை
ஆறாவதுகள் சிருஷ்டித்தன
நாகரீகம் பேசின
உடைகள்
மொழி பரந்திருந்தது
அர்த்தங்கள் விளங்காததாயும்
அவன் நவீன கவிதைகளை
காற்றில் கிறுக்கினான்
குடித்தான்
மிகுதியை சுவாசித்தான்
ஒற்றைச் செருப்பினடி
ஒதுங்கிக் கிடந்தது
உலகம்
“சாப்பிட்டாயா” வினவ
என் வாசனைகள் தடுத்தன
ஆடை உள்ளுடம்பு
அதனுள் ஒரு உடம்பு
நிரம்பாத பள்ளங்களுடன்
மணக்கத் தொடங்கியிருந்தது
மறுதலிக்கப்பட்ட ஆத்மா
அவனுள் ஒளிர்வதாகப்பட்டது
“பிரம்மை”
அவன் சாக்கடை
ஆலயம் திறந்தது
எனக்காக மட்டும்
யாசித்த அவனுக்கும்
யாசிக்காத நாய்க்கும்
பிச்சை மறுத்து உள்ளேகி
பிச்சை கேட்டு மீண்டு
நானும் அவனும்
ஒரே தெருவில் நின்றோம்
அவனது ஆறாவது
சுதந்திரப்பட்டது
நகைத்தது எனதை
அது சிறையிலிருந்தது
எனக்கும் சிரிப்பு வந்தது
என் இதழ் பிறழ்ந்து
இம்மியாகப் பிரிந்து
யாரும் கவனிக்கவில்லை
என்னிடம் காரணம் இல்லை
பார்த்துக் கொண்டிருந்தார்கள்
அவனை
அதிசயங்கள் அந்நியமாக்கப்படுகின்றன
ஆறாவதுகளின் காரணங்களினால்
அவன் பேசத் தொடங்கியிருந்தான்
காரணமில்லாமல்
நிறைய சிரித்தான்
காரியத்துடன்
என்னைப் பார்த்தும்
இல்லை
அது “பிரம்மை”
அவன் பைத்தியம்
இரு கவிதை…ஒரு காதல்…
Author: நதியானவள், February 4, 2010ஒன்று இவள்
சற்றிறங்கிய மேகம்
தூறிக் கொண்டிருந்தது
கூடவே மரமும்
கரைந்து ஒன்றாகி
ஒரு நிழல்
காதல்
2.
சேர நின்றது
மழை
புன்னகைத்தாய்
பூத் தொடுத்தாய்
மௌனமாக்கப்பட்ட இதழ்
மொழிகளற்ற பிரக்ஞை
எட்டக் கிடந்தது
காமம்
தொடக் கடந்தது
காதல்
பெயர்
Author: நதியானவள், February 4, 2010இருந்திருக்க வேண்டாம்
பெயர்
இயல்புகளின் கலவை
இருப்பின் அடையாளம்
உருவ அருவங்களின் திரட்டு
என்றோ அழியும் உடலின்
அழியாத முகவரி
உலகம் என்னைச் சுட்ட
நானே வெட்டிக் கொடுத்த விரல்
நானே மறந்த சுயம்
இது எப்படி?
எங்கிருந்து இயங்குகிறது?
உச்சரிப்புக்குத் திரும்புவது
மனமா? உடலா?
நச்சரிப்புக்க்ளின் தீர்ப்பில்
தவணை முறை முடிவானதா?
இயங்க மறுக்கும் இரண்டுக்கும்
ஏன் ஒரே தலைப்பு?
இப்போது திரும்பியது
ஏதாவதாக இருந்திருக்கலாம்
ஒன்றாக
நிமிர்ந்து பார்ப்பதில்லை
என்று தலையும்
நினைவில் வைப்பதில்லை
என்று மனதும்
என் உலகின் பிரசன்னம்
விளங்காமல் போனதற்கும்
இதற்கும் சம்பந்தம் இருக்கும்
என்னையே படித்திராதது
என்னைப் பிரதிபலிப்பது
அபத்தம்
உங்கள் நினைவுகளில்
என்னை மறந்திடுங்கள்
அது நானில்லை
என் பெயர்
பெயர்
ஒரு பொய்
உண்மையில்லாத உண்மை
நீயில்லாத நீ
உன்னைப் பற்றிய
இயல்புகளைத் தாண்டி
கற்பனைகள் செல்லாத தீவு
அது உதவாது
நான் ஒளி
உங்களைப் போல
நீங்கள் என்னில்
ஒளிர்வதைப் போல
நான் பெயர்களை
நினைவுபடுத்துவதில்லை
அது தேவையில்லை
நான் உன்னை அறிய
என் பெயர்
இப்படி இருந்திருக்க வேண்டாம்
இருக்கவும் வேண்டாம்
உனதும் அப்படியே

