Archive for November, 2009


கண்ணில்லாக் கண்ணாடி

Author: நதியானவள், November 29, 2009
November 29, 2009

என் கண்ணாடிக்கு
கண்கள் முளைத்திருந்ததை
இன்று அதிகாலைதான் பார்த்தேன்

 

நான் எதிர்பார்த்ததை விட
அகோரமாக இருந்தது
நான் அழகாகத் தெரிந்தேன்

 

ஆனால் அதன் கோர விழிகள்
என்னை நிராகரித்து
எனக்குள் இறங்கின

 

கண்ணாடியின் நீள் கரங்கள்
என்னுடல் கிழித்து
உள்ளே பதிந்து
நார் நாராய் நார் நாராய்
இழுத்துக் கொண்டே இருந்தன

 

இது என்ன
எதன்மேலான ஆசை இது
மேலும் என்னென்ன
காயங்கள்
வலிகள்
கலைந்த கவிக்கருக்கள்
இன்றிரவுக்கான கனவு
நாளைக்கான பயம்
அடுத்த நொடிக்கான பொய்
இன்னொன்றிலான பொறாமை
ஏன் நேற்று, முந்தய நாள்,
முதல்மாதம் அதற்கு
முந்திய வருடக் காதல்கள்
துரோக நட்பு
அப்பப்பா ஆயிரம் ஆயிரம்

 

கழிவுச் சாக்கடைக்குள்
அமிழ்ந்த ஒரு ஊரின்
பிணக்குவியல் போல
கணக்கற்று கணக்கற்று

 

பொல பொலவென உதிர்ந்த
புற உடம்பை அள்ளி
பொட்டலங் கட்டிஎடுத்து
என் முன்னே கடை பரப்பியது
கண்ணாடி

 

ஒரு தலைச் சிலுப்பலில்
மீண்டும் வளர்ந்தது உடல்
சாக்கடைப் பிணங்களை
மீண்டும் தின்று கொண்டே
கண்ணாடி பார்த்தது

 

நான் மிக அழகாகத் தெரிந்தேன்
கண்களிருக்கவில்லை
அதற்கு
இப்போது எனக்கும்


நினைவு வன்புணர்ச்சி

Author: நதியானவள், November 28, 2009
November 28, 2009

அகோர நினைவுகளைப் பிரசவித்த
அசிங்கத் தழும்புகள் பல
என் வயிறெங்கும்
நான் மார்பு கிழித்தெறிந்த
அவற்றின் எச்சங்கள் பல
என் வழியெங்கும்

 

 

முண்டங்களெல்லாம் சேர்ந்து
முடிவிலியில் சந்திக்கின்றன
பிறிதொரு நாளில் எனை
இம்சிப்பது பற்றியும்
இன்னொரு மன வன்புனர்வுக்கான
இரகசிய ஆயத்தம் பற்றியும்
சூடாகவே விவாதிக்கின்றன

 

 

பிண நாற்றங்களிடையில் திமிறி
தன் மூச்சையே தேடும் உயிர்
வெற்று நெஞ்சுக் கூட்டில்
காதல் இருப்பதாகப் பிதற்றுகிறது
அது கனவில் இருக்கிறது

 

 

எதிர்பாராத கணத்தில் நடக்கும்
நினைவு வன்புணர்ச்சிகளில்
களைத்துக் கிடக்கிறது மனம்
காதல் பற்றிக் கதைக்க
அவற்றின் வாய் தேடுகிறது

 

 

எனினும் நீளும் வலிகளின் போது
முண்டங்களே பிரசவமாகின்றன
அவை முடிவிலியிலேயே தான்
சந்திக்கவும் செய்கின்றன


தானே தொலையும் நான்

Author: நதியானவள், November 21, 2009
November 21, 2009

தான் அடிக்கடி தொலைவதாக
அலட்டிக் கொண்டேயிருந்தது
“நான்”

நாலு பேருக்குள்
கலையும்”நான்” யாரென்பது தான்
எனக்கு விளங்கவேயில்லை

 

 

என் ஆழமனங் கிழித்து
எழுந்து பறக்கும் அதற்கு
தீனி போடுகிறது கூட்டம்

 

 

நெரிசலுக்குள் நின்று
நெக்குருகவே அது பெரும்
பிரயத்தனப்படுகிறது

 

 

அதற்கு கூட்டம் வேண்டும்
சிரிக்க
அழ

 

 

தான் தூங்கும் போதும்
கூடவர நிழலுக்கு
உத்தரவிட்டிருந்தது

 

 

திரளும் கூட்டம் தன்னை
தானறியாமலேவிளுங்குவதாகப்
பின்னர் கூறியது

 

 

சனத்துக்குள் சனமாகிப்
பிணமாகிப் போனேன் என்று
இருந்துவிட்டு அழவும் செய்கிறது

 

 

தொலைத்ததும் தொலைக்கப்படுவதும்
தொலைப்பதும் தொலைக்க இருப்பதும்
தன்னாலே அது தன்னுள்ளே என்ற
பரம உண்மை அறியாது

 

 

மரங்கள் பிசாசுகளாகும்
நடுநிசியில் விழித்திருந்து
“நான்”அடிக்கடி தொலைவதாக
அலட்டிக் கொண்டேயிருக்கிறது
“நான்”


நித்திரை என்பதான பொய்

Author: நதியானவள், November 7, 2009
November 7, 2009

விஸ்வரூபமெடுக்கும் சில பல
விளக்கமற்ற கனவுகளுக்குள்
தொலைந்தே போனது தூக்கம்

 

தேடிப் பறந்த மனதோ – தன்னை
மயானங்களின் எல்லையில்
பேய் பிடித்துப் போனதாகத்
தகவல் அனுப்பியது

 

நித்திரை என்பதான பொய் வெளிகளில்
நின்று புலம்புவதில் கழிந்தன
என் ஒவொரு இரவுகளும்

 

தூக்கம் தின்னுவதாகச் சுட்டப்பட்ட
நினைவுப் பட்சி
வலிகளின் கல்லறைகளின் இடுக்கில்
உணவிட்டுக் கொண்டிருந்தது
அலகில் வழிந்தது என் மனதின் குருதி
தின்னப் பட்டிருந்தது
அன்றிரவுக்கான தூக்கம்

 

இன்றைய வலிகளுக்கு
இப்போது தான் கல்லறை செய்தேன்
இன்றிரவும் தூங்க வேண்டும் – ஆனால்
நீள் வெளிகளில் நின்று
அழுவதோடு நிறுத்த வேண்டும்
தூக்கம் ஏற்கனவே சாப்பிடப் பட்டிருக்கும்