Archive for August, 2009
என் மூச்சு!
Author: நதியானவள், August 27, 2009எனக்காக சுவாசிப்பதை
எப்போது நிறுத்தினாய் நீ!
காதல் மட்டும்
Author: நதியானவள், August 26, 2009தொலைந்து போனதா; எது?
என் உலகம்!
எங்கே போனாய்; நீ?
பேசிக்கொண்டிருந்தேன்;
அப்போதா; யாருடன்?
என்னுடன்!
உன்னுடன்; எதைப் பற்றி?
களவு போன என்னுயிர் பற்றி!
உயிர் இருக்கிறதா? யாரிடம் அது?
இன்னும் தகவல் இல்லை!
சரி; சூரியன் எங்கே?
தொலைந்து போனதாக நினைவு!
நிலாவாவது?
அப்படி என்றால்!
அப்போ எதுதான் இருக்கிறது?
வெறுமை!
யார் யார் உறவுனக்கு?
எல்லோரும் தொலைந்ததாக கனவு!
ஐயோ;
எல்லாம் தொலைத்து; நீயும் தொலைந்து;
அப்படி என்னதான் செய்கிறாய் நீ?
காதல்!…….
காதல் மட்டும்!…
எனக்கென்ன வேண்டும்?
Author: நதியானவள், August 23, 2009வானத்தை வளைக்க வேண்டாம்;
பூமியைப் பிளக்க வேண்டாம்;
காற்றைக் குடிக்க வேண்டாம்;
நெருப்புமேன்? வேண்டவே வேண்டாம்!
கொத்துக் கொத்தாய்க் கட்டியிருக்கும்
செத்துப் போன பூக்கள் வேண்டாம்;
வேறொருவர் கனவு பேசும்
உணர்வில்லா மடல்கள் வேண்டாம்!
வைரங்கள் வேண்டாம்; – அட
தங்கமே வேண்டாம்;
மழைத்துளி களவெடுத்து
சிப்பி தரும் முத்தும் வேண்டாம்!
கண்ணே; மணியே; வேண்டாம்!
எனக்காக சாதலும் வேண்டாம்;
மன மாடங்கள் வேண்டாம்; – எனக்கு
மணி மாடங்களும் வேண்டாம்!
உணர்வுகள் ஓங்கிப் போக
உயிரது தேடி ஏங்க
காதல் என்று வரும்போது
அன்பே நான் கேட்பதெல்லாம்;
கண் பார்த்து; என் கண்ணுள் பார்த்து;
நின் காதல் உரைக்க வேண்டும்!
அளவில்லா உன் அன்பில் – நான்
அமைதி கண்டு வாழ வேண்டும்!
தோற்கிறேன் என்று தோன்றினால்
சாய உன் தோள் வேண்டும்!
சாகின்றேன் எனத் தோன்றும் போது
உயிர் தந்து போக உன் கை வேண்டும்!
எப்படி விளக்குவேன்!
Author: நதியானவள், August 23, 2009அறியாமைக்குள் புதைந்து கிடக்கும் உனக்கு
எப்படி விளக்குவேன் நான்;
என் காதலை!
என் காதல் நானுரைத்து
உன் காதலின் கை பிடித்த போது
வானங் கனிந்து துளி சேர்த்து
வாழ்த்துக்கள் அனுப்பியதைச் சொல்லியா?
நிலா தன் ஒளி கூட்டி
விண்மீன்கள் சேர்த்துக் கட்டி
உன் மன விலாசமிட்டு
என் மன வாசல் சேர்த்ததை வாசித்தா?
மழையில்லா ஒரு பொழுதில்
மேகங்களிடை வானவில் தோன்றி
வர்ணங்களில் கிரீடம் செய்து
என் காதலுக்குப் போட்டதைக் காட்டியா?
பூக்கள் மலரும் கணம் பார்த்து
வாசங்கள் பொத்திச் சேர்த்து
தென்றலே நேரில் தந்த – என்
காதல் வாசம் முகரத் தந்தா?
பறக்கும் புல்லினங்கலேல்லாம்
பத்து நிமிடம் இடை நிறுத்தி
பூத்துப் போன நம் காதலுக்கு
இசைத்துப் போன பாடலைப் பாடியா?
அட விடு!
கண்கள் கதைத்துப் போக – மிகுதியில்
மௌனம் உரைத்துப் போக – விகுதியில்
நம்மிரு உயிர்கள் உயிர்த்துப் போக
காதல் செய்தும் புரியாது;
அறியாமைக்குள் புதைந்து கிடக்குமுனக்கு
எப்படி விளக்குவேன் நான்;
என் காதலை!
காதலை வணங்க வேண்டும்!
Author: நதியானவள், August 23, 2009அறியாத வயதில் வரும்;
புரியாத கனவு தரும்;
கனவு வேர்கள் தேடுகையில்
விழுதுகள் தூக்குச் செய்யும்!
உயிருக்கே உயிரும் வரும்;
உதிர்கையில் மரணம் வரும்;
இல்லையென்று போனாலும்
இருப்பதுவாய் தோன்றிப் போகும்!
நிழல்கள் நிஜங்களாகும்;
நிஜங்கள் நிழல்களாகும்;
இரண்டையும் பிரித்தறியும் போது – மனம்
இறையைச் சென்றடைந்திருக்கும்!
கண் மடல்கள் கருக் கொள்ளும்;
கண்ணீரைப் பிரசவிக்கும்;
உயிரதுவோ கருக் கொண்டு
காதலினைப் பெத்துப் போடும்!
வலிகள் வரங்களாகும்;
வலிக்கையிலும் காதல் நினைவு வரும்;
சாவென்று வந்தாலும் – அதைச்
சற்று நேரம் நிறுத்தி வைக்கும்!
இரவிரவாய்க் கனவு வரும்;
பின்னிரவில் தூக்கம் வரும்;
விடிந்தெலுந்து பார்க்கையிலே
நரிகள் கூடி ஊளையிடும்!
உண்மைகள் தோற்றுப் போகும்;
பொய்மைகள் தோன்றிப் பாடும்;
விளக்கங்கள் தெரிகையிலே – உசிரு
விண்ணேறிப் போயிருக்கும்!
கணையாழி கொண்டு கட்டி
பிணையாளி ஆக்கிப் போகும்;
ஆணைகள் அழியும் போது
காதலின் யாகத்தீயில் உயிரெரியும்!
காணிக்கைகள் தயாராய் இருக்கும்;
காதலுக்காய்த் தவமிருக்கும்;
காலங்கள் கரைகையிலே – தெய்வக்
கர்ப்பக் கிருகம் தொலைந்திருக்கும்!
உயிர் கருக் கொண்டு தரும் காதல்
இறைஎன்றாகிப் போவதனால்
காதலிக்க நினைத்தால் முதலில்
காதலை வணங்க வேண்டும்!
உதயத்தின் பின் யோசிக்கலாம்!
Author: நதியானவள், August 22, 2009ஒரு சர்வம் ஒடுங்கிப் போனதனால்
பல ஆன்மாக்கள் அழுகின்றன!
நீண்டு நிமிர்ந்து நிற்கும்
மயான சுவர்கள்;
யோகிகள்!
ஓங்கி எதிரொலிக்கும் மரண ஓலம்;
உயிருலுக்கும் ஒப்பாரி;
இறங்கும் தாலிகள் – இருந்தும்
இறக்காத மனச் சுமைகள்;
மெய்யான சில முகங்கள்;
பொய்யான பல முகங்கள்;
உறவுகளை உணர முன்னர் – உயிர்
உதிர்ந்து போன கதைகள் – என
யாவற்றுக்கும் சாட்சியாகி
நீண்டு நிமிர்ந்து நிற்கும்
மயான சுவர்கள்;
யோகிகள்!
எதுவுமே மிச்சமில்லை;
இழப்பதற்கு ஒன்றுமில்லை;
ஒன்றுமில்லாமல் போவதற்கா – இங்கு
இத்தனை போராட்டம்!
தீ படரச் சாம்பலாகி – நீரில்
கரைந்து போகும் பிண்டம்!
உயிர் கொண்டு வாழும்போது
உலுக்குவதோ இந்த அண்டம்!
ஆறடி பொய்;
அஸ்தியே மிஞ்சிப் போகும்;
சாவின் சக்தி அறியின்
வாழ்தலில் பக்தி தெரியும்!
கவலைகள் கண்ணீர் கரைக்கா;
கற்களை தண்ணீர் கரைக்கா; – ஆனால்
வந்தார் போக வேண்டும்;
அதைக் காலம்தான் கரைக்க வேண்டும்!
இழப்புக்கள் இவ்வளவுதான் – என்று
இங்கொன்றும் அளவுகளில்லை
இழவுகள் விழும் மட்டும் – மனது
இறையைத் தேடுவதில்லை;
ஆக;
வாழ்கின்ற வாழ்க்கையிதில்
நேற்றயதைக் கழிக்க வேண்டும்!
இன்ற்றயதை வாழ வேண்டும்!
அப்போ நாளையை;
உதயத்தின் பின் யோசிக்கலாம்!
சோக அழகு!
Author: நதியானவள், August 22, 2009சோக அழகு போல் இருக்கிறது;
என் இதயம் கொண்ட
உன் நினைவு!
தனிமை தேடி!
Author: நதியானவள், August 20, 2009வலிகளும் கவி கூறும்
வழிகளும் வந்த பின்பு
உக்கி உதிர்ந்து போகின்றன
என் உணர்வுகள்!
ஏகாந்தம் படர்ந்து – எனை
ஏப்பம் விடத் துணிந்த பின்பு
ஏங்கத் தொடங்கியிருக்கிறது மனது;
எதுவுமில்லாத் தனிமைக்காக!
கலங்கிய குளம் காட்டும்
குழம்பிய விம்பங்கள் போல
விளங்காமல் இருக்கின்றன
விசித்திரமான பல உறவுகள்!
கனவுகளில் கண் மயங்கி – அது
கலைகையில் உயிர் உருகி
நனவுகளில் மனமளுகித் தினம்
நடந்து போகின்றேன் என் மீது நானே!
கண்ணீர் உப்புச் சுரந்து
கன்னத்தில் கோலமிட்ட போதும்
துடைக்கவும் நாதியற்றேன்;
தூக்கில் தொங்கிப் போன என் உணர்ச்சிகளால்!
என் கை நானே கோர்த்து
எதிர் நீச்சலிட்டுத் தாங்கி
நானாக நடக்கையிலே – என்
தனிமையை ஏன் வதைக்கிறீர்கள்?
வலிக்கிறது என்றாலும்
வலி தரும் உலகமிது
அழுகின்றேன் எனக்குள்ளே;
என்னுயிரே ஊமையாக!
ஆக;
மனமேங்கும் தனிமை தேடி
சூழ்ந்த இருள் தனைக் கொளுத்திப்
பயணிக்க வேண்டும் நான்!
வலி எழுதும் கவிதைகள் – என்
வாசல் வந்து சேரும் முன்னர்
மனமேங்கும் தனிமை தேடி
பயணிக்க வேண்டும் நான்!
யாருக்கு வேண்டும்!
Author: நதியானவள், August 17, 2009கனவுகள் இறக்கி ஒரு கணம்
நிம்மதியாகத் தூங்க வேண்டும்;
ஆம்; யாருக்கு வேண்டும் என் கவிதைகள் ?
ஊடல்!
Author: நதியானவள், August 17, 2009நின்று கொண்டிருந்தோம்;
நீயும் நானும்!
ஒரு இரவு; இரு நிலவு;
என்றாய் நீ
அன்றிலிருந்து என்னுடன்
ஊடலில் இருக்கிறது நிலா!

