Archive for the 'பாசமாய்ப் பற்றெடுத்து' Category


அம்மா

Author: நதியானவள், October 5, 2009
October 5, 2009

கர்ப்பம் தந்த அதே கதகதப்பை

இப்போதும் பொழிகின்றன
உன் பேரன்புச் சிறகுகள்
நித்தமும் பிரவாகமெடுக்கும்
உன் கருணைச் சுழிக்குத்தான்
எத்துணை ஆழம்
 
 
அட்சய பாத்திரங்கள் அத்தனையும்
கையிலே வைத்திருக்கிறாய்
போதாதற்கு உன் புன்னகை வேறு
 
 
பருவ காலங்கள் அத்தனையும்
உன்னைக் கேட்டே வருகின்றன
நீயே காவலுக்கிருப்பதால்
 
 
எதற்கும் யோசிப்பதா
கணமும் கவலைப்படுவதா
எனக்காக அதையும் நீயே செய்கிறாய்
என் வலிகள் உனதாக்கி
சுகங்கள் மட்டுமே எனதாக்கி வாழ
உன்னால் மட்டுமே முடிகிறது
அம்மா
கோடி வார்த்தைகளை
என் தமிழ் தந்திடினும்
திணறித் தான் போனேன்
உன்னைக் கவிதையாய் வடிக்க
முடிவில்லாது நீளும்
உன் பேரன்பு போலவே
முடிக்க முடியாது நீள்கின்றன
உன்னைப் பற்றிய என் கவிதைகள்