Archive for the 'நட்பு ஓடம் என் நதியில்' Category


காதலின் மேல் ஒரு நட்பு

Author: நதியானவள், October 15, 2009
October 15, 2009

நீளும் மயான வெளிகளில்
தூங்கிக் கிடந்த நிசப்தத்தைக்
கிழித்துப் போட்டதல்லால்
வேறொன்றும் செய்யவில்லை
உன் குரல்

 

துயின்றிருந்த நினைவுக் குழந்தைகளை
மீண்டும் தாலாட்டுவதுதான்
பெரும் பாடாகிப் போனது எனக்கு

 

பொட்டல் வெளிகளில்
கொட்டும் மேகத்துக்கும் எனக்கும்
யாதொரு சம்பந்தங்களும் இல்லை
என் உயிர் நனைக்கும் துளியை
எந்த வானமும் கருக் கொள்ளவில்லை

 

கண்கள் வழியும் கனவுகளை
வாசிக்கத்தான் உன்னால் முடியும்
என் மன ஊருணியின் ஆழங்கள்
ஆபத்தானவை
அவற்றுக்குப் பலி கொடுக்க
உன்னைத் தயார் படுத்த முடியாது

 
என் சுயங்களைப் பதுக்கி
உன் கருத்துக்களில் வாழ
என்னால் முடியாது
என் காதலுக்கான ஒரு கவிதையில்
பிறக்கும் காதலை
இன்னொன்றுக்காக நொடியில்
கொன்றே போடுகிறேன்
இது நிஜத்தில் முடியுமென்றிருக்கிறாயா?

 

உன் காதல்
என் நட்பு
சிறு இடைவெளியில்
நூற்றாண்டுகளுக்கான தூரம்
என்னால் கடக்க முடியாது

 

வழிப் போக்கர்களை பிரிகையிலே
வலித்துப் போகும் போது
நட்பைப் பிரிதல்
வலிக்காதா என்ன?

 
வலிகளில் வடியும் குருதியின்
பசைகளில் ஒட்டி இருக்கிறது
மீந்த நேசம்
இன்னொரு சந்தர்ப்பத்தில்
இன்னொரு காதலில்
உனக்கு நிச்சயம் பயன்படட்டும்

 

உன் காதலின் மகரந்தங்களில்
என் நட்பெனும் பூ கற்பிழக்க வேண்டாம்
காதலை கீழே போட்டு
நட்புக் கோபுரங் கட்டும்
துரோகங்கள் எனக்கு வேண்டாம்

 

சற்று விலகு
தள்ளி நின்று அழு
என் மயானங்களின் நிசப்தத்தில்
தூங்கும் என் நினைவுகளை
மீண்டும் எழுப்பாதே
நான் இவ்வளவுதான்
இப்படித்தான்

எனக்குத் துரோகங்கள் தெரிய வேண்டாம்

தெரியப்படுத்தப் படவும் வேண்டாம்


வா….பிரிவோம்…போ

Author: நதியானவள், September 24, 2009
September 24, 2009

காதலும் நட்பும்
சந்திக்கும் புள்ளியில்
சமாந்திரங் கீறியது
மனது

 

அரிதாரங்கள் அப்பி
மறைத்துப் போகலாந்தான்
வழியும் குருதியில்
கோடு கரையுமே?

 

இதற்குத்தான்
எதிரெதிர்க் கோணங்களைக்
கணக்குப் பார்க்காதே என்றேன் நான்
எப்போதும் சமனாக இருக்காது
அது கீறுவதைப் பொறுத்து

 

விதிவிலக்குகளும் உண்டு
காமம் கலக்காத காதல்
காதல் கலக்காத நட்பு
முடியாதில்லையா?

 

என் மனதிற்கு வெள்ளையடிக்கும்
செலவை நீ ஏற்றுக் கொள்ளாதே
அதற்கு முன் எத்தனையோ
கிறுக்கல்களை அழிக்க
உன் ஆயுள் செலவிடவேண்டும்

 

அதனால் தான் சொல்கின்றேன்
சமாந்திரங்கள் சேர்வதில்லை
இறைக் கிறுக்கல்கள் அழிவதில்லை

 

வா
பிரிவோம்
போ

 

நட்பு அதிலேயே கிடக்கட்டும்
திரும்பினால் தொடர்வோம்


நான் என்னைச் செய்வேன்!

Author: நதியானவள், August 2, 2009
August 2, 2009

இப்போதும் நினைவிருக்கிறது;
நீ என் தோழியான காலம்!
இலைகள் உதிரக் கண்டு – என்
இதயம் அழுது கொண்டிருந்த போதொன்றில்
புன்னகைத்து இணைத்துக் கொண்டாய்;
என்னுடன் உன்னை;

சட சடவென்று துளிர்க்க ஆரம்பித்தது
எம் நட்பு மரம்!

 

என் கை பிடித்து; உரிமை எடுத்து;
தலை சாய்த்து நீ பார்க்கையிலே
தோன்றிப் போகிறது எனக்கு;
உனக்காய் நான் என்ன செய்தேன்;
இல்லை; என்ன செய்வேன்;
கலங்கி நிற்கும் என் கண்மணியே;
உனக்காய் நான் என்ன செய்வேன்?

 

வலிகள் தம் வாழ்த்துரையை – உன்
வாழ்க்கையில் வாசித்துப் போனதென்கிறாயா?
வருந்தாதே!
பற்றிய என் கையை மேலும்
இறுகப் பற்றிக் கொள்;
எனக்கான மூச்சு நிறுத்தப் படினும்
என் கை உன்னைக் கை விடாது!

 

உதிரும் கண்ணீர்த் துளிகள்
உருக்குகின்றனவா உன்னை;
நிறுத்து!
தேவதைகள் கண் கலங்கி
கண்டதுண்டா நீ!
பெண்களாய்ப் பிறந்ததனால்
நாம் தேவதையானவர்கள்!

 

உன் கன்னந் தடவும் பிறர் கைகளில்
உன் காயங்களின் கறைகளா;
உதிராதே!
கறைகள் கழுவிப் போகும்
கங்கை நதி வேண்டுமா?
அந்த நதியின் குறை கழுவி
அள்ளி வருவேன் உனக்காக!

 

கணகள் வழியும் கனவுகளை
ஏந்த யாருமில்லை என்றேங்குகிறாயா
கலையாதே!
நீ கடக்கும் சாலைகளில்
நிறுத்தி வைக்கிறேன் நான் என்னை;
கனவுகளுடன் நினைவுகளையும் ஊற்று;
பொத்திச் சேமிப்பேன் உனக்காக!

 

மெலிந்து ஒலிகிறதா உன் மூச்சு;
வலிந்து போகிறதா உன் உயிர்;
தெளிந்து வா என் தோழியே!
தோழமைக்காக நான் என்ன செய்தேன்;
என்ன செய்வேன்; என்பது ஒரு பொருட்டல்ல;
நான் என்னைச் செய்வேன்!
உனக்காக!