Archive for the 'என் ஈழ தேசம்…' Category


எழுந்து வாருங்கள்

Author: நதியானவள், October 13, 2009
October 13, 2009

எழுந்து வாருங்கள்
என் வீரத் தமிழர்களே
நாம் மரணிப்பதற்கு முன்னும் பின்னும்
செய்யவேண்டியவை கோடி

 

ஆண்டாண்டு காலமாய்
ஆண்ட எம் மண்ணை
அந்நியன் ஆள விட்டுப் போகலாமா?

 

தமிழ் காத்த எம் குலத்தை
எவனோ ஒருவன் அழிப்பதுவா
எம் குலப் பிஞ்சு துயில
ஏதோ ஒன்றில் தாலாட்டா

 

நான்கு சுவரைக் கட்டி
நான்காயிரம் ஆணையிட்டு
நாளைய சந்ததிகளின்
நாட்கள் எண்ணப்படுவதா

 

கவரிமான் ஒப்ப
கற்புக் காக்கும் எம் குலத்தில்
கறுப்பு ஆடுகளின்
கர்ப்பங்கள் தங்குவதா

 

எழுந்து வாருங்கள்
என் வீரத் தமிழர்களே
நாம் மரணிப்பதற்கு முன்னும் பின்னும்
செய்யவேண்டியவை கோடி

 

கொட்டும் மழை நிறுத்திக்
கொப்பளிக்கும் மின்னல் கட்டி
இழுத்து வாருங்கள் அந்த இடியை
“இத்தால் நாம் அறிவிப்பது என்னவென்றால்”
என்று அறையுங்கள் முரசை
கலையட்டும் இவ்வுலகின் தூக்கம்

 

எம் கண்கள் வழிந்த கண்ணீரில்
ஏன் உப்பளங்கள் செய்தாயென்று
கேட்டுக் கத்துங்கள் தோழர்களே
உங்கள் பெருகும் துளிகளில்
பொங்கிக் கொக்கரிக்கட்டும் கடல்கள்
மூழ்கட்டும் இந்தப்
பாழ்பட்ட பொய் உலகு

 

 
எங்கள் உயிரின் வலியில்
அறிக்கைகளை மட்டுமே போட்டு
காயங்களைக் குடைந்து குடைந்து
ஏன் எங்களுக்கு நஞ்சு வைத்தீர்கள் என்று
கதறுங்கள் தமிழர்களே
உங்கள் நாப்பிறக்கும் விஷத்தில்
நஞ்சாகட்டும் காற்று

 

காணாமல் போவதற்கா நாம்
தாய் வயிற்றில் கருவானோம்
எங்கே தொலைத்தீர்கள் எங்களை?
ஏன் தொலைத்தீர்கள் எங்களை?
எங்கள் சுயமழிக்க நீங்கள் யார்?
எழுந்து கேளுங்கள் தோழர்களே
உங்கள் கேள்விகளில்
தொலையட்டும் இவ்வுலகு
தொலைந்தே போகட்டும்

 

முறம் கொண்டு புலிவிரட்டி
முலைப்பாலூட்டிய தமிழ்த்தாயின் மடி
முளைத்த வீரர்கள் நாம்
எமையழிக்க உம்மால்
எப்படி முடியுமென்று
அறையுங்கள் உங்கள் முரசுகளை
உலகத்தின் செவிப்பறைகள்
கிழிந்தே போகட்டும்

 

உங்களுள் எரியும் பொறிகளைக் கொட்டி
உருவாக்குங்கள் எரிமலைகளை
விதைத்துப் போங்கள் இத் தரணி எங்கும்
பெத்துப் போடுங்கள் அக்கினிக் குஞ்சுகளை
கெக்கலித்துப் பரவட்டும் தீ
எரிந்து போகட்டும் உலகம்

 

எரிந்து போங்கள் அதில் நீங்கள்
உங்கள் ஊனுருகிப் பிறக்கும்
முள்ளந்தண்டுகளில் நிமிரட்டும்
எங்கள் குலம்
உங்கள் எலும்புகளில் செய்யுங்கள்
குழந்தைகளுக்கான ஆயுதங்களை
சாம்பல் தட்டி மீண்டும்
எழுந்து பறவுங்கள் “பீனிக்ஸ்” களாக
மறைத்துப் போங்கள்
இந்த உலகத்தின் சூரியனை

 

மிஞ்சும் பிளம்புகளை உங்கள்
பிஞ்சுகள் சுமக்கட்டும்
உங்களை எரித்த கொள்ளிகளில்
உதிர்க்கட்டும் அவர்களின் சூரியன்
அதில் சிவந்து சிறக்கட்டும்
எம் ஈழ தேசம்

 
எழுந்து வாருங்கள்
என் வீரத் தமிழர்களே
நாம் மரணிப்பதற்கு முன்னும் பின்னும்
செய்யவேண்டியவை கோடி


முப்புரம் எரித்தவனே
முக்கண் விநாயகனே
மூத்தவனைக் கோபித்த
எந்தன் கடம்பனே
சிவனின் பாதியே
சின மிகு காளியே
கோவில் காத்து நிற்கும்
வைரவேனே, மாடனே
முக்கோடி தேவர்களே
முனிகளே பரிவாரங்களே

 

வாருங்கள் எந்தன்
வழக்காடு மன்றுக்கு
நில்லுங்கள் அங்கே
எனக்கொரு வழக்குண்டு

 

பாலும் பசுநெய்யும்
பழமும் பன்னீரும்
பட்டுங் குஞ்சரமும்
பறித்தெடுத்த புதுப் பூவும்
கொட்டும் விபூதியும்
குளிர்க்க வைக்கும் அபிசேகமும்
நாவினிக்கும் தமிழ்ப் பாவும்
நாழிக்கொரு பூசையுமாய்
உங்களுக்கு நாங்கள்
என்னதான் குறை வைத்தோம்?

 

சம்பந்தன் பாக் கொண்ட
கேதீச்சரத்தானே
பேடுடன் விடையேறி
பேருலா நீ வந்த வீதியெல்லாம்
எருதுடன் எமை வெட்டுகையில்
நெற்றிக் கண் திறந்து
நெடுமென நின்ற ஈசா
முப்புரம் எரித்த தீயில்
மூன்று பொறி கிடைக்கலையா?

 

பசிகொண்ட சம்பந்தன்
இசைகூட்டி அழுத போது
ஞானப் பால் கொண்டு
விடையேறி வந்தவளே
பிஞ்சு நடை பயிலா வீட்டில்
பிச்சை மறுத்த சிவனே
பசி கொண்ட என் குழந்தை
செத்த தாய் மடி உறிஞ்சிய போது
வானுக்கும் மண்ணுக்குமாய்
ஏன் உங்கள் பசு பறக்கவில்லை?

 

நாலு வீதியில் பந்தலிட்டு
நாம் தேர் இழுத்த பாதைகளில்
நாயாய் என் சனம்
நாதியற்றுச் சாகையிலே
நல்லூர்க் கந்தா
எந்தப் படை வீட்டில் நீ
எத்துணைவி துணையிருந்தாய்?

 
கற்பூரச் சட்டியிலே தான்
காணிக்கையாக எரிந்த மகள்
கற்புக்காய் எரிகையிலே
கற்பூர நாயகியே கனகவல்லி
எங்கு போனாய்?

 

நயினையின் தேவியளே
தெல்லிப்பளை துர்காவே
வற்றாப்பளை குடிகொண்ட
மார்பு திருகி மதுரை எரித்தவளே
என் தேசம் அழிகையிலே
எங்கேயம்மா உங்கள் சூலங்கள்?

 

பாய் விரித்து மடை கொட்டி
பால் நிலவில் உனைப் பணிந்து
கோவில் காப்பது போல் எம்
கோட்டை காக்கக் கேட்டோமே
கோப வைரவனே
நீயுமேன் வரவில்லை?

 

ஐயோ ஐயோ என்று
அலறித் துடித்தோமே
எரியுதே என் தேசம்
ஈசா வா என்றோமே
படைத்தவன் படி அளப்பான் என்று
பட்டினியில் செத்தோமே
எங்கு போனீர்கள்
ஏன் ஒருவருமே வரவில்லை?

 

என் தாய் எனக்குத் தந்த
பாலின் மேல் உரிமை இருந்தால்
அவளூட்டி வளர்த்து விட்ட
என் தமிழ் மேல் உரிமை இருந்தால்
சைவத்தையும் தமிழையும்
கண்களாக்க உரிமை இருந்தால்

 

அந்தக் குருதி மேல் ஆணையிட்டு
என் தமிழின் மேல் ஆணையிட்டு
முக்கண்ணா நீ படைத்த
மூவுலகின் மேல் ஆணையிட்டு
அழைக்கிறேன் உங்களை;

 

வாருங்கள் கடவுள்களே
நில்லுங்கள் அங்கே
எனக்கும் உங்களுக்கும்
நீண்டதொரு வழக்குண்டு


என் தேசத்தின் தேவியே….

Author: நதியானவள், September 21, 2009
September 21, 2009

புல்லரிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றன
என் கைகள்
பல வேளைகளில் கோஷம் போடவும்
ஏன் சில வேளைகளில்
உன்னைப் பற்றிக் கவிதை கிறுக்கவும்

 

தலைப்புக்களில் தலையின்றிக் கிடக்கும்
தமிழினத்தைப் பார்த்து
முதல் பந்தி தாண்ட மறுக்கின்றன
என் விழிகள் அதிலேயே செத்து
கண்ணிமைக் கல்லறைகளைத்
தாமாகவே மூடுகின்றன

 

ஐயோ கடவுளே என்று
கதறுவதோடு நிற்கிறது
என் மனம்
இதயச் சவப்பெட்டிக்குள் இருப்பதால்
மெலிதாகவே கேட்கின்றன
அதன் முனகல்கள்

 

விதைத்த மனிதர்களின் தோட்டத்திலேயே
நடக்க மறுக்கும்
என் கால்கள்
மயானமான என் தேசத்தில்
எப்படிப் பதியும்
இப்போதே உதிர்கின்றன
என் விரல்கள் ஒவ்வொன்றாய்

 

புலம் பெயர்ந்து தொலைந்து
புதைந்தே போனது வாழ்க்கை
விட்டுப் பறந்த உயிரும்
அழுகிப் போன உடலும்
மரணித்துக் கிடக்கின்றேன் நான்

 

என் முகவரி தந்த
என் ஈழ தேசமே
உன் எரியும் நெருப்பில்
என் சிதைக்குக் கொஞ்சம்
கொள்ளி கிடைக்காது போயிற்றே
என் சாம்பல் தூவ
உன் நதிகள் ஒன்றிலிருந்தும்
உத்தரவு கிடைக்காது போயிற்றே

 

என் தேசத்தின் தேவியே
அந்நியப் பனியில்
அஸ்தியைக் கரைக்கும்
ஆசி வாங்கி வந்தவளம்மா
நான்
அதனால் தான்
உன் எல்லை தாண்டுகையிலேயே
செத்து விட்டு வந்தேன்

 

என் தாயே
உன்னுடன் உதிர்க்கட்டும்
என் உணர்வுகள்
நீ எரிக்கையில்
எரிக்கப் படட்டும் என் சாபங்கள்

 

அதுவரை பிசாசாய்த் தானும்
என்னுயிர் உன் மடி தேடி வந்தால்
இருக்க விடம்மா
உன் புளிய மரத்தில்
நீ பெற்றவள்
இது கூடவா செய்ய மாட்டாய்


கலைந்த என் தேசம்.!

Author: நதியானவள், July 12, 2009
July 12, 2009

கலைந்து போய்க்கிடக்கிறது என் தேசம்;
நிலா தந்து போன வானம் – தினம்
பிணம் பெய்து போகக்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.;

 

நிறைந்த வெளிகள் தோண்டி – என்
உறவுமறைந்த குழிகள் மூடிப் – பல
திறந்த முகாம்கள் வந்த பின்பு
கலைந்துபோய்க் கிடக்கிறது என் தேசம்..;

 

நீதி தவறிய அரசும் – உலக
சூது பிதற்றிய வங்கமும் – கலக
வாது ஏற்றிய சங்கங்களும் – எமக்கு
முக அரிதாரம் அப்பிப் போனதனால்
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.;

 

சிதறிய அங்கமும் உடலும் – மணக்கும்
குதறிய காயமும் வடுவும் – நெடுக்கும்
கதறிய தாயும் சேயும் உறவும் -மேலும்
இதயம் பிளக்கும் நினைவும்
சேர கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்!

 

கல்லறை நீளும் வயல் வெளிகள் – நெல்
புதைந்து எலும்பு செழிக்கும் குழிகள் – செல்
பொழிந்து தளும்பிக் கொடுக்கும் நர பலிகள் -கல் உம்
கனிந்து உருகும் கண்ணீர்க் கதைகள் – எல்லாம் கண்டு
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.!

 

விளைந்து காலெடுக்கும் வெடிகள் – பல
பறந்து வால்வெடுக்கும் குண்டுகள் – சில
கழிந்து கற்ப்பெடுக்கும் அரக்கர்கள் – நில
அளந்து சூறையாடும் குண்டர்கள் – என்று
நின்று நீளும் பட்டியல் தாளாது
கலைந்து போய்க் கிடக்கிறது என் தேசம்.!

 

சூழ்ந்த கடல் என் கடல் – அதைச்
சூழ்ந்த நிலம் என் நிலம் – இதைச்
சேர்ந்த புலம் என் குலம் – நினைச்
சார்ந்த ஈழம் தமிழ் ஈழம் – என
விண்ணைக் கவர்ந்த குரல்வளை நெரிக்கப்பட
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்.!

 

ஆக;மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்;
மரித்த தாய் மார்புறிஞ்சி – தன்னுயிர்
தரித்த சேய் கண்டபின்பு
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்!