Archive for the 'வாழ்க்கையெனும் சாகரம்' Category
மறு தாக்கம்
Author: நதியானவள், December 18, 2009பிரட்டிப்போட்ட கரப்பானின்
பிய்ந்து கொண்டிருக்கும்
இறகுகளுக்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கிறது மனது
சாத்தியப்பாடுகள் தரும்
நிகழ்தகவுகளின் அன்புகளில்
நெரிந்து வாழப் பழகுகிறது
நசிந்த உயிர்
பெயர் எழுதப்படாத கண்ணீர்
யாருக்குமே இல்லாமல் வழிய
பிணமாகக் கனக்கிறது
மௌனம்
ஆழ் மனதுக்குள் அலையும்
உருவற்ற கருவைத்
துரத்துவதொடு நிற்கிறது
கவிதை
முற்றுப்புள்ளிகளற்றுப் போன
இறுதிக் கவிதையின் முடிவாய்
மிஞ்சி விளைகிறது
காயம்
நிரந்தரமற்ற தூக்கத்தில்
நெருடும் விடியலில்
காற்றில் கீறுகிறது
பாச விரல்
இன்னொரு கரப்பானை
இறுகப் பிடித்தபடி
தானே தொலையும் நான்
Author: நதியானவள், November 21, 2009அலட்டிக் கொண்டேயிருந்தது
“நான்”
நாலு பேருக்குள்
கலையும்”நான்” யாரென்பது தான்
எனக்கு விளங்கவேயில்லை
என் ஆழமனங் கிழித்து
எழுந்து பறக்கும் அதற்கு
தீனி போடுகிறது கூட்டம்
நெரிசலுக்குள் நின்று
நெக்குருகவே அது பெரும்
பிரயத்தனப்படுகிறது
அதற்கு கூட்டம் வேண்டும்
சிரிக்க
அழ
தான் தூங்கும் போதும்
கூடவர நிழலுக்கு
உத்தரவிட்டிருந்தது
திரளும் கூட்டம் தன்னை
தானறியாமலேவிளுங்குவதாகப்
பின்னர் கூறியது
சனத்துக்குள் சனமாகிப்
பிணமாகிப் போனேன் என்று
இருந்துவிட்டு அழவும் செய்கிறது
தொலைத்ததும் தொலைக்கப்படுவதும்
தொலைப்பதும் தொலைக்க இருப்பதும்
தன்னாலே அது தன்னுள்ளே என்ற
பரம உண்மை அறியாது
மரங்கள் பிசாசுகளாகும்
நடுநிசியில் விழித்திருந்து
“நான்”அடிக்கடி தொலைவதாக
அலட்டிக் கொண்டேயிருக்கிறது
“நான்”
நித்திரை என்பதான பொய்
Author: நதியானவள், November 7, 2009விஸ்வரூபமெடுக்கும் சில பல
விளக்கமற்ற கனவுகளுக்குள்
தொலைந்தே போனது தூக்கம்
தேடிப் பறந்த மனதோ – தன்னை
மயானங்களின் எல்லையில்
பேய் பிடித்துப் போனதாகத்
தகவல் அனுப்பியது
நித்திரை என்பதான பொய் வெளிகளில்
நின்று புலம்புவதில் கழிந்தன
என் ஒவொரு இரவுகளும்
தூக்கம் தின்னுவதாகச் சுட்டப்பட்ட
நினைவுப் பட்சி
வலிகளின் கல்லறைகளின் இடுக்கில்
உணவிட்டுக் கொண்டிருந்தது
அலகில் வழிந்தது என் மனதின் குருதி
தின்னப் பட்டிருந்தது
அன்றிரவுக்கான தூக்கம்
இன்றைய வலிகளுக்கு
இப்போது தான் கல்லறை செய்தேன்
இன்றிரவும் தூங்க வேண்டும் – ஆனால்
நீள் வெளிகளில் நின்று
அழுவதோடு நிறுத்த வேண்டும்
தூக்கம் ஏற்கனவே சாப்பிடப் பட்டிருக்கும்
என் ஒரு நாள்
Author: நதியானவள், October 27, 2009ஒன்றுமே செய்யாமல் போனதற்காய்
ஓவென்று அழும் நொடிகளால்
நிரம்பிக் கிடக்கிறது
இலையுதிர்வது – அது காலம்
Author: நதியானவள், October 27, 2009உதிரும் இலைகளின் வடுக்களைச் சுமந்து
நெடுமென நிற்கிறது கால மரம்
இறைந்து கிடக்கின்ற சருகுகளுடன்
காய்ந்து கிடக்கின்றன மனத் துகள்கள்
பாதி மனதுதான் பாவம்
உச்சியில் கூடு கட்டி
கீழிருக்கும் மீதிக்காய்
ஓர் ஒப்பாரி முடிக்கிறது
எப்போதோ பொழியும் ஒரு மழையில்
துளிர்க்கிறது சிறு தளிர்
இப்போது மனது கீழே பார்ப்பதில்லை
அதற்கு தளிருடன் வேலையிருக்கு
காலமரத்தின் இன்னொரு வளையத்தில்
அது இலையாக உதிர்க்கப் படலாம்
மரத்துக்கு இதைப் பற்றித்
துளியூண்டும் வருத்தமில்லை
மிஞ்சிய மனம்தான் விம்மும்
அடுத்த மழைக்கான காத்திருப்பில்
இன்னொரு ஒப்பாரி இசைக்கும்
அது அடிக்கடி குனிந்து பார்க்கும்
உதயத்தின் பின் யோசிக்கலாம்!
Author: நதியானவள், August 22, 2009ஒரு சர்வம் ஒடுங்கிப் போனதனால்
பல ஆன்மாக்கள் அழுகின்றன!
நீண்டு நிமிர்ந்து நிற்கும்
மயான சுவர்கள்;
யோகிகள்!
ஓங்கி எதிரொலிக்கும் மரண ஓலம்;
உயிருலுக்கும் ஒப்பாரி;
இறங்கும் தாலிகள் – இருந்தும்
இறக்காத மனச் சுமைகள்;
மெய்யான சில முகங்கள்;
பொய்யான பல முகங்கள்;
உறவுகளை உணர முன்னர் – உயிர்
உதிர்ந்து போன கதைகள் – என
யாவற்றுக்கும் சாட்சியாகி
நீண்டு நிமிர்ந்து நிற்கும்
மயான சுவர்கள்;
யோகிகள்!
எதுவுமே மிச்சமில்லை;
இழப்பதற்கு ஒன்றுமில்லை;
ஒன்றுமில்லாமல் போவதற்கா – இங்கு
இத்தனை போராட்டம்!
தீ படரச் சாம்பலாகி – நீரில்
கரைந்து போகும் பிண்டம்!
உயிர் கொண்டு வாழும்போது
உலுக்குவதோ இந்த அண்டம்!
ஆறடி பொய்;
அஸ்தியே மிஞ்சிப் போகும்;
சாவின் சக்தி அறியின்
வாழ்தலில் பக்தி தெரியும்!
கவலைகள் கண்ணீர் கரைக்கா;
கற்களை தண்ணீர் கரைக்கா; – ஆனால்
வந்தார் போக வேண்டும்;
அதைக் காலம்தான் கரைக்க வேண்டும்!
இழப்புக்கள் இவ்வளவுதான் – என்று
இங்கொன்றும் அளவுகளில்லை
இழவுகள் விழும் மட்டும் – மனது
இறையைத் தேடுவதில்லை;
ஆக;
வாழ்கின்ற வாழ்க்கையிதில்
நேற்றயதைக் கழிக்க வேண்டும்!
இன்ற்றயதை வாழ வேண்டும்!
அப்போ நாளையை;
உதயத்தின் பின் யோசிக்கலாம்!

