இரு கவிதை…ஒரு காதல்…

எழுதியது: நதியானவள், மாசி 4, 2010
மாசி 4, 2010
1.
இரு நிழல்கள்
ஒன்று இவள்
சற்றிறங்கிய மேகம்
தூறிக் கொண்டிருந்தது
கூடவே மரமும்
கரைந்து ஒன்றாகி
ஒரு நிழல்
காதல்

 

 

 

2.
சேர நின்றது
மழை
புன்னகைத்தாய்
பூத் தொடுத்தாய்
மௌனமாக்கப்பட்ட இதழ்
மொழிகளற்ற பிரக்ஞை
எட்டக் கிடந்தது
காமம்
தொடக் கடந்தது
காதல்

பெயர்

எழுதியது: நதியானவள், மாசி 4, 2010
மாசி 4, 2010
என் பெயர் இப்படி
இருந்திருக்க வேண்டாம்

 

 

பெயர்
இயல்புகளின் கலவை
இருப்பின் அடையாளம்
உருவ அருவங்களின் திரட்டு
என்றோ அழியும் உடலின்
அழியாத முகவரி
உலகம் என்னைச் சுட்ட
நானே வெட்டிக் கொடுத்த விரல்
நானே மறந்த சுயம்

 

 

இது எப்படி?
எங்கிருந்து இயங்குகிறது?
உச்சரிப்புக்குத் திரும்புவது
மனமா? உடலா?
நச்சரிப்புக்க்ளின் தீர்ப்பில்
தவணை முறை முடிவானதா?
இயங்க மறுக்கும் இரண்டுக்கும்
ஏன் ஒரே தலைப்பு?

 

 

இப்போது திரும்பியது
ஏதாவதாக இருந்திருக்கலாம்
ஒன்றாக
நிமிர்ந்து பார்ப்பதில்லை
என்று தலையும்
நினைவில் வைப்பதில்லை
என்று மனதும்
என் உலகின் பிரசன்னம்
விளங்காமல் போனதற்கும்
இதற்கும் சம்பந்தம் இருக்கும்

 

 

என்னையே படித்திராதது
என்னைப் பிரதிபலிப்பது
அபத்தம்
உங்கள் நினைவுகளில்
என்னை மறந்திடுங்கள்
அது நானில்லை
என் பெயர்

 

 

பெயர்
ஒரு பொய்
உண்மையில்லாத உண்மை
நீயில்லாத நீ
உன்னைப் பற்றிய
இயல்புகளைத் தாண்டி
கற்பனைகள் செல்லாத தீவு
அது உதவாது

 

 

நான் ஒளி
உங்களைப் போல
நீங்கள் என்னில்
ஒளிர்வதைப் போல
நான் பெயர்களை
நினைவுபடுத்துவதில்லை
அது தேவையில்லை
நான் உன்னை அறிய

 

என் பெயர்
இப்படி இருந்திருக்க வேண்டாம்
இருக்கவும் வேண்டாம்
உனதும் அப்படியே

கொஞ்சமாய் எனக்குமாய்!

எழுதியது: நதியானவள், மார்கழி 30, 2009
மார்கழி 30, 2009

நிதர்சனங்களின் கற்பிதங்கள்
நீளமாக இருக்கின்றன
என்னால் ஒருமுறையேனும்
வாசிக்க முடியாதனவாக

 

அந்த எண்ணற்றவைகளுக்குள்
சிலவற்றைத்தான் விளக்கினாள் அம்மா
இன்னமும் விளக்கிக் கொண்டே

 

நடை குறித்த கவலைகளிலும்
உடை பற்றிய விவாதங்களிலும்
அவளை முத்தமிடல் என்பது
சாத்தியப்படுவதாக இல்லை
புன்னகைத்தல் கொஞ்சம்
சுலபமாக இருக்கிறது

 

நின்று நடக்க நினைப்பினும்
அவளின் கைத்தடியின் நீளம்
எட்டக் கூடியதாகவும்
முட்ட மட்டும் முடிவதாகவும்
அம்மா “பாரதி” படித்திருக்கவில்லை

 

களிமண் உட்செரித்த நீர்
பின்னொரு நாளில்
சிலையில் வடிந்ததை
நான் நம்பவில்லை
அப்படியே இதையும்
பாரதிக்காய்
கொஞ்சம் எனக்குமாய்

மறு தாக்கம்

எழுதியது: நதியானவள், மார்கழி 18, 2009
மார்கழி 18, 2009

பிரட்டிப்போட்ட கரப்பானின்
பிய்ந்து கொண்டிருக்கும்
இறகுகளுக்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கிறது மனது

 

 

சாத்தியப்பாடுகள் தரும்
நிகழ்தகவுகளின் அன்புகளில்
நெரிந்து வாழப் பழகுகிறது
நசிந்த உயிர்

 

 

பெயர் எழுதப்படாத கண்ணீர்
யாருக்குமே இல்லாமல் வழிய
பிணமாகக் கனக்கிறது
மௌனம்

 

 

ஆழ் மனதுக்குள் அலையும்
உருவற்ற கருவைத்
துரத்துவதொடு நிற்கிறது
கவிதை

 

முற்றுப்புள்ளிகளற்றுப் போன
இறுதிக் கவிதையின் முடிவாய்
மிஞ்சி விளைகிறது
காயம்

 

நிரந்தரமற்ற தூக்கத்தில்
நெருடும் விடியலில்
காற்றில் கீறுகிறது
பாச விரல்
இன்னொரு கரப்பானை
இறுகப் பிடித்தபடி

நான் இருந்தேன்

எழுதியது: நதியானவள், மார்கழி 11, 2009
மார்கழி 11, 2009

என் சோற்றுப் பருக்கைகளில்
உன் பெயர் எழுதப்பட்டு
அழிக்கப்பட்டிருக்கவேண்டும்
உண்ணும் போது
உன் நினைவு வந்தது

 

சாலை கடக்கையில் எனக்குக்
கை காட்டிய சிறுவன்
நீயாகத் தெரிந்தாய்
அப்போது சிரிக்கவும் செய்தாய்

 

இலக்கற்று அலைந்த மேகத்தில்
மழை கருக்கட்டியதை
நான் ரசித்தபோது
அந்த வெள்ளத்தில்
நீ மூழ்கிக் கொண்டிருந்தாய்

 

இசை மீட்டி யாசித்த
முதியவனின் வயலின்
உன் ஏந்திய கைபோல
வளைந்து தெரிந்தது
அதன் இசையில் உன் குரல்
இழைந்து இழைந்தது

 

மார்புறிஞ்சிக் கண்ணயர்ந்த
பிஞ்சொன்றைக் காண்கையிலே
நீ தாயிழந்து நின்று
ஓவென்று அலறியதும்

 

கந்தல் உடை கட்டி
காணமல் போன தந்தை தேடி
விந்தி விந்தி நீ
வீதிகளில் திரிந்ததுவும்

 

பெருந் தெருக்கள் தாங்கும்
நியோன் விளக்குகளில்
நின் விழியின் கண்ணீர்
தளும்பி வழிந்ததுவும்

 

என் அடி மனதில் ஊறி
ஊழித்தாண்டவம் ஆடி
உலுக்கிப் போட்ட போதும்
நீ என் நினைவில் இருந்தாய்

 

இன்னொரு கவிதை பற்றி
இந்தக் கவியூடு எண்ணி
எழுதி முடிக்க முன்
நீ மரித்திருந்தாய்
என் மகவே
அப்போதும் நான்
உன்னை நினைத்துக் கொண்டே இருந்தேன்
நினைக்க மட்டுந்தான் இருந்தேன்

தண்ணீர்ப் பாம்புகள்

எழுதியது: நதியானவள், மார்கழி 10, 2009
மார்கழி 10, 2009

ஆழ்கிணற்றுக்குள் யாரோ
அள்ளிக் கொட்டிய இருட்டைக்
கிள்ளிப் போடுவது பற்றியும்
துலாவின் வாளி விழ எழும்
பிலாக்கணத்தை நிறுத்துவது குறித்தும்
தண்ணீர்ப் பாம்புகளை விடத்
தவளைகள்தான் கவலைப்பட்டன

 

படிகளில் குறிக்கப்பட்ட தத்தம்
பரம்பரைப் பெயர்கள் கொண்டே அவை
நீதிமன்றக் கூடுகளில்
அழைக்கப் பட்டிருந்தன

 

கோப்புகளுக்கும் வாய்தாக்களுக்கும்
நீர்ப்பாம்புகள் தலையைக் காட்டின
அதில் பல பெண்களாக இருந்தன
சில வாற்பேத்தைகளும்

 

நிலாவின் நிழல் விழுந்த
அரைகுறை இரவொன்றில்
“பாம்புகள் படியேற”
விதிகள் செய்யப்பட்டதாக
தவளைகள் கத்தின
அடுத்த மழையில் செத்தன

 

பின்வந்த அமாவாசையில்
பிசைந்த இருட்டில் நின்று
பாம்புகள் தீர்ப்பைப் படித்தன
தங்களின் காதுகள்
செவிடாகிப் போனதனால்
காத்திருக்கத் தொடங்கின
வாற்பேத்தைகளுக்காக
இப்போதும்

சிந்தாமல் விட்ட துளி

எழுதியது: நதியானவள், மார்கழி 2, 2009
மார்கழி 2, 2009

கண் ஓட்டைகளுக்குள்
இவ்வளவு குருதியிருக்குமென்று
நான் நினைதேயிருக்கவில்லை

 

அது உதடு நனைக்கும் போதான
உவர்ப்பை என்னால்
எப்போதுமே ரசிக்க முடிவதில்லை

 

என் நெஞ்சு சாற்றை உறிஞ்சி
எப்போதாவது வழியும் துளி
இனிக்கவும் செய்கிறது

 

பலவேளைகளில்
தாடை இறுக்கி
காற்றின் மூச்சு நிறுத்தி
விசும்பலின் கழுத்துத் திருகி
விக்கலில் முடிக்கையில்
நறுக்கென்ற ஒரு வலியுடன்
தன்னிருப்பை சொல்லி
துளியை உள்வாங்குகிறது
இதயம்

 

கூர்ப்பின் பரிணாமத்தில்
இன்னொன்றாக மாறி
என்னை ஆளத் தொடங்குகிறது
நான் சிந்தாமல் விட்ட அந்த
செங்குருதித் துளி

கண்ணில்லாக் கண்ணாடி

எழுதியது: நதியானவள், கார்த்திகை 29, 2009
கார்த்திகை 29, 2009

என் கண்ணாடிக்கு
கண்கள் முளைத்திருந்ததை
இன்று அதிகாலைதான் பார்த்தேன்

 

நான் எதிர்பார்த்ததை விட
அகோரமாக இருந்தது
நான் அழகாகத் தெரிந்தேன்

 

ஆனால் அதன் கோர விழிகள்
என்னை நிராகரித்து
எனக்குள் இறங்கின

 

கண்ணாடியின் நீள் கரங்கள்
என்னுடல் கிழித்து
உள்ளே பதிந்து
நார் நாராய் நார் நாராய்
இழுத்துக் கொண்டே இருந்தன

 

இது என்ன
எதன்மேலான ஆசை இது
மேலும் என்னென்ன
காயங்கள்
வலிகள்
கலைந்த கவிக்கருக்கள்
இன்றிரவுக்கான கனவு
நாளைக்கான பயம்
அடுத்த நொடிக்கான பொய்
இன்னொன்றிலான பொறாமை
ஏன் நேற்று, முந்தய நாள்,
முதல்மாதம் அதற்கு
முந்திய வருடக் காதல்கள்
துரோக நட்பு
அப்பப்பா ஆயிரம் ஆயிரம்

 

கழிவுச் சாக்கடைக்குள்
அமிழ்ந்த ஒரு ஊரின்
பிணக்குவியல் போல
கணக்கற்று கணக்கற்று

 

பொல பொலவென உதிர்ந்த
புற உடம்பை அள்ளி
பொட்டலங் கட்டிஎடுத்து
என் முன்னே கடை பரப்பியது
கண்ணாடி

 

ஒரு தலைச் சிலுப்பலில்
மீண்டும் வளர்ந்தது உடல்
சாக்கடைப் பிணங்களை
மீண்டும் தின்று கொண்டே
கண்ணாடி பார்த்தது

 

நான் மிக அழகாகத் தெரிந்தேன்
கண்களிருக்கவில்லை
அதற்கு
இப்போது எனக்கும்

நினைவு வன்புணர்ச்சி

எழுதியது: நதியானவள், கார்த்திகை 28, 2009
கார்த்திகை 28, 2009

அகோர நினைவுகளைப் பிரசவித்த
அசிங்கத் தழும்புகள் பல
என் வயிறெங்கும்
நான் மார்பு கிழித்தெறிந்த
அவற்றின் எச்சங்கள் பல
என் வழியெங்கும்

 

 

முண்டங்களெல்லாம் சேர்ந்து
முடிவிலியில் சந்திக்கின்றன
பிறிதொரு நாளில் எனை
இம்சிப்பது பற்றியும்
இன்னொரு மன வன்புனர்வுக்கான
இரகசிய ஆயத்தம் பற்றியும்
சூடாகவே விவாதிக்கின்றன

 

 

பிண நாற்றங்களிடையில் திமிறி
தன் மூச்சையே தேடும் உயிர்
வெற்று நெஞ்சுக் கூட்டில்
காதல் இருப்பதாகப் பிதற்றுகிறது
அது கனவில் இருக்கிறது

 

 

எதிர்பாராத கணத்தில் நடக்கும்
நினைவு வன்புணர்ச்சிகளில்
களைத்துக் கிடக்கிறது மனம்
காதல் பற்றிக் கதைக்க
அவற்றின் வாய் தேடுகிறது

 

 

எனினும் நீளும் வலிகளின் போது
முண்டங்களே பிரசவமாகின்றன
அவை முடிவிலியிலேயே தான்
சந்திக்கவும் செய்கின்றன

தானே தொலையும் நான்

எழுதியது: நதியானவள், கார்த்திகை 21, 2009
கார்த்திகை 21, 2009
தான் அடிக்கடி தொலைவதாக
அலட்டிக் கொண்டேயிருந்தது
“நான்”

நாலு பேருக்குள்
கலையும்”நான்” யாரென்பது தான்
எனக்கு விளங்கவேயில்லை

 

 

என் ஆழமனங் கிழித்து
எழுந்து பறக்கும் அதற்கு
தீனி போடுகிறது கூட்டம்

 

 

நெரிசலுக்குள் நின்று
நெக்குருகவே அது பெரும்
பிரயத்தனப்படுகிறது

 

 

அதற்கு கூட்டம் வேண்டும்
சிரிக்க
அழ

 

 

தான் தூங்கும் போதும்
கூடவர நிழலுக்கு
உத்தரவிட்டிருந்தது

 

 

திரளும் கூட்டம் தன்னை
தானறியாமலேவிளுங்குவதாகப்
பின்னர் கூறியது

 

 

சனத்துக்குள் சனமாகிப்
பிணமாகிப் போனேன் என்று
இருந்துவிட்டு அழவும் செய்கிறது

 

 

தொலைத்ததும் தொலைக்கப்படுவதும்
தொலைப்பதும் தொலைக்க இருப்பதும்
தன்னாலே அது தன்னுள்ளே என்ற
பரம உண்மை அறியாது

 

 

மரங்கள் பிசாசுகளாகும்
நடுநிசியில் விழித்திருந்து
“நான்”அடிக்கடி தொலைவதாக
அலட்டிக் கொண்டேயிருக்கிறது
“நான்”

6 பக்கங்களில் 1 வது பக்கம்12345»...Last »